Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

எச்சரிக்கைகளை கண்டுகொள்ளாமல் கொரோனா 2-ம் அலையை தடுக்கத் தவறியதா மத்திய அரசு?

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் அதிதீவிர பரவல் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், 'இந்தச் சூழல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் முன்னரே இருந்தது தெரிந்தும், மத்திய அரசு கண்டுகொள்ளாமல் தடுக்கத் தவறிவிட்டது' என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக 'தி டெலிகிராப்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், கொரோனா குறித்த மத்திய அரசின் தேசியப் பணிக்குழுவின் உறுப்பினரான சுகாதார ஆராய்ச்சியாளர் ஒருவர், "எச்சரிக்கை சமிக்ஞைகள் இருந்தபோதிலும் இரண்டாவது அலையை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. பேரழிவைத் தணிக்கக் கூடிய நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்த்துவிட்டது. இது வருத்தமாக இருக்கிறது. ஒரு பெரிய அலை, நம்மைத் தாக்கும் என்பதற்கான அறிகுறிகள் ஏற்கெனவே இருந்தன.

சுகாதார அமைச்சகமா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலா, அரசாங்கமா? - இதெற்கெல்லாம் யார் பொறுப்பு என நாம் கேட்கலாம். இதெற்கெல்லாம் நான் சொல்லும் பதில்: கூட்டாக நாம் தோல்வியுற்றோம். பெரிய அலைக்கான எச்சரிக்கைகள் முன்பே இருந்தும், நாம் அதைத் தடுக்க ஆயத்தமாகவோ அல்லது பொது எச்சரிக்கையாக மாற்றவில்லை. இதற்கு நேர்மாறாக, சுகாதார அமைச்சகம் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க தயக்கம் காட்டியது.

முகக்கவசம் அணிவதிலும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதிலும் மக்கள் அலட்சியம் காட்டுவதே இதற்கு காரணம் என பல மூத்த சுகாதார அதிகாரிகள் என்று கூறியுள்ளனர். இதுபோல், பொதுமக்களை நோக்கி சுகாதார அதிகாரிகள் விரல் காட்டுவது நியாயமற்றது.

நீங்கள் மக்களை குறை சொல்ல முடியாது. மக்களுக்குத் தேவையான வழிகாட்டுதல், உரிய தகவல்கள் தேவை. கிடைக்கக்கூடிய தரவை நம்மால் பொதுமக்களுக்கு போதுமான எச்சரிக்கை செய்திகளாக மாற்ற முடியவில்லை.

ஜனவரி மாதம் ஒரு ஐ.சி.எம்.ஆர் கணக்கெடுப்பில் 25 சதவிகித மக்கள் மட்டுமே ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது. இது 75 சதவீத மக்கள் இன்னும் எதிர்கால அலைக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது என்பதைக் குறிக்கிறது. இந்த இரண்டாவது அலை, முதல் அலையை விட பெரியதாக இருக்கும் என்பது ஐரோப்பாவிலிருந்து, அமெரிக்காவிலிருந்து நாங்கள் அறிந்தோம்.

அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் தொற்றுநோய் குறைந்து, புதிய பாதிப்புகளின் தினசரி எண்ணிக்கை சீராக வீழ்ச்சியடைந்த பின்னர், தேர்தல் பேரணிகளிலும், கும்பமேளாவிலும் ஏற்பட்ட கூட்டத்தைத் தடுக்க அரசாங்கம் சிறிதகூட முயற்சி எடுக்கவில்லை" என்று கூறியிருக்கிறார் அந்த ஆராய்ச்சியாளர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்