Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

யாரெல்லாம் தயக்கமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்? - மருத்துவர் வழிகாட்டுதல்

``தடுப்பூசி ஏன் அவசியம்?.. யாரெல்லாம் தயக்கமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்?" - மருத்துவர் விளக்கம்!

18 - 45 வயதுக்குட்பட்டோர் கொரோனாவுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வழிமுறைகளை அரசு ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட வழிமுறைகள் செய்யப்பட்டிருந்தன. தடுப்பூசி மட்டுமே இப்போதைக்கு நம்மிடையே இருக்கும் பேராயுதம் என்பதை கருத்தில்கொண்டு, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும், தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தையும் அரசு அதிகப்படுத்தி வருகிறது. இருப்பினும், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு, மக்கள் பலரும் தயக்கம் காட்டுகின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டால் பக்கவிளைவுகள் வருமா, ஏற்கெனவே இணை நோய்கள் இருப்பவர்களுக்கு தடுப்பூசி உகந்ததாக இருக்குமா, தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா வராமல் முழுமையாக தடுக்கலாமா என பலருக்கும் அச்சம் இருக்கிறது.

தயக்கமேதும் இல்லாமல் தடுப்பூசியை யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம், தடுப்பூசியால் என்ன நன்மை கிடைக்கும், தடுப்பூசி ஏன் அவசியம் என்பது பற்றி, மருத்துவர் அர்ஷத் அகில் நம்முடன் பகிர்ந்துக்கொள்கிறார்.

image

``* தடுப்பூசி போட்டுக்கொண்டால், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதத்தை குறைக்கலாம்; மிகத் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவதை, தடுக்க முடியும்; அறிகுறிகளோடு கூடிய கொரோனா பாதிப்பை, 60 முதல் 95 சதவிகிதம் தடுக்க முடியும் ; அறிகுறிகளற்ற கொரோனா பாதிப்பை, மிகக்குறைவான விகிதத்தில் தடுக்கலாம்.

* கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மீண்டவர்கள், உங்கள் உடல் பூரண குணமடைந்து குறைந்தபட்சம் 2 வாரங்கள் கழித்து கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளவும்.

* ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் இருப்பவர்களுக்கு, இந்தியாவில் போடப்படும் கோவேக்ஸின் - கோவிஷீல்டு தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானதுதான். ஆகவே அவர்கள் தயக்கமின்றி தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். இவர்களில், இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுபவர்கள், மிகச்சமீபத்தில் டயாலிஸிஸ் செய்தவர்கள், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், ஆஞ்சியோகிராபி சிகிச்சை மேற்கொண்டவர்கள், மருத்துவர்கள் சொல்லும் காலம் வரை காத்திருந்து பின் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும்.

* சரும ஒவ்வாமை பிரச்னைகள் இருப்பவர்கள், உணவுக்கான ஒவ்வாமை இருப்பவர்கள், ஆஸ்துமா இருப்பவர்கள், நரம்பு சார்ந்த பிரச்னை இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், ரத்த சிக்கல் இருப்பவர்கள் போன்றோருக்கு, தடுப்பூசி எவ்வித பிரச்னையும் தராது. ஆகவே அவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இருப்பினும், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன், தங்கள் மருத்துவரிடம் அதை தெரிவித்து, ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.

image

* இந்தியாவில் இப்போதுவரை 18 வயதுக்குட்பட்டவர்கள் மேல் தடுப்பூசிக்கான சோதனைகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே இப்போதைக்கு அவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டாம்.

* கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, அவர்கள் அனுமதியளித்தால் மட்டும், தடுப்பூசி போடவும். பொதுவாக கர்ப்பிணிகளுக்கு போடப்படும் தடுப்பூசிகளில் உயிரோடு இருக்கும் வைரஸ் இருக்கும் மருந்து, இருக்ககூடாது என சொல்லப்படும். உயிரற்ற வைரஸ்களை கொண்ட தடுப்பூசியை என்றாலும்கூட, முழு பரிசோதனைகளும் முடிவடையாமல் அவற்றை கர்ப்பிணிகளுக்கு தரமுடியாது. இந்தியாவில் இப்போதிருக்கும் இரு தடுப்பூசிகளும், நூறு சதவிகித பரிசோதனைகள் முடிவடையாதவை. ஆகவே எல்லா கர்ப்பிணிகளுக்கும் உகந்ததாக இது இருக்காது. அதனால், கர்ப்பிணிகள் அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்காமல், மருத்துவரிடம் கலந்தாலோசித்து, அவர்கள் கூறும் ஆலோசனையை பெற்று முடிவு செய்யவும்.

* தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள், ஊசி போட்டு பின் அடுத்த 30 நிமிடங்கள் அந்த மருத்துவ வளாகத்திலேயே இருந்து, உடலை கவனிக்கவும். ஒருவேளை ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், உடனடியாக அங்கிருக்கும் மருத்துவ வல்லுநர்களிடம் பேசி அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளவும். தடுப்பூசி போட்டபிறகு, ஒருசிலருக்கு காய்ச்சல் - உடல் வலி - தலைசுற்றல் - தலைவலி போன்ற அறிகுறிகள் தெரியக்கூடும். இப்படி அறிகுறிகள் தெரிவது இயல்புதான் என்றாலும், ஒருநாளுக்கு மேல் அதே அறிகுறிகள் தெரிந்தால், சுயமருத்துவம் செய்துக்கொள்ளாமல், அருகிலிருக்கும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளவும். அந்த ஒருநாள் இடைவெளியில், டோலோ - 65 மாத்திரை எடுத்துக்கொள்ளலாம்.

தடுப்பூசி, கொரோனா பாதிப்பு ஏற்படுவதை 100 சதவிகிதம் தடுப்பதில்லை என்பதற்காக, ஒருசிலர் தடுப்பூசி போடுவதை தவிர்க்கின்றனர். இப்படியானவர்கள், ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி மட்டுமே, மிகத் தீவிர பாதிப்பு ஏற்படாமல் உங்களை காக்கும். தடுப்பூசிதான், உயிரிழப்புகளை தடுக்கும். இந்த இரண்டு நன்மைகள் மட்டுமே, இப்போதைக்கு இந்த உலகளாவிய பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. அதனால், தடுப்பூசிக்கு எப்போதும் தடைவேண்டாம்!".

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்