Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'என்கிரிப்ஷனுக்கு விரோதமானது' - மத்திய அரசு விதிகளுக்கு எதிராக 'வாட்ஸ்அப்' போர்க்கொடி

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகள் தொடர்பான காலக்கெடு முடிந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக இந்திய அரசுக்கு எதிராக 'வாட்ஸ்அப்' நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக ஊடகங்கள், ஓடிடி சேவைகள் மற்றும் டிஜிட்டல் செய்தி மேடைகளுக்கான புதிய கட்டுப்பாடு விதிமுறைகள் கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. இந்த விதிமுறைகளை அமல்படுத்த மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

புதிய விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில் சமூக ஊடக நிறுவனங்கள், டிஜிட்டல் இடைமுகவர்கள் எனும் அந்தஸ்தை இழக்க வேண்டியிருக்கும். அதன் பிறகு, பிரச்னை என வரும்போது அவை கிரிமினல் நடவடிக்கைக்கும் உள்ளாகலாம். இதனால் இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகளின் செயல்பாடு தொடர்பான கேள்விகள் எழுத்துள்ளது.

image

இதனிடையே, புதிய விதிமுறைகளை செயல்படுவத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனமும் இதேபோன்ற தகவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்புடன் பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக புதிய விதிமுறைகளை எதிர்த்து வாட்ஸ்அப் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமான வாட்ஸ்அப், டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதாக விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொய்த் தகவல்களை முதலில் பகிர்பவரை கண்டறிந்து தகவல் தெரிவிக்க வேண்டும் எனும் புதிய விதிமுறைகளின் ஓர் அம்சம், பயனாளிகளின் தனியுரிமையை - அதாவது பிரைவசியை மீறுவதாக அமைந்துள்ளதால், இதை ரத்து செய்ய வேண்டும் என வாட்ஸ்அப் தரப்பில் கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

image

தவறான செயலில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக சட்டப்படி கோரும்போது மட்டுமே இவ்வாறு செய்ய வேண்டும் என்றாலும், முதலில் பகிர்ந்தவர்களை அறிய முற்படுவது, சேவையின் என்கிரிப்ஷன் பாதுகாப்புக்கு விரோதமாக அமையும் என வாட்ஸ்அப் கருதுகிறது.

எனினும், இந்த வழக்கு தொடர்பான சுயேட்சையாக உறுதிபடுத்த முடியவில்லை என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வாட்ஸ் அப் செய்தி தொடர்பாளரின் கருத்தை அறிய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வருகிறது என்பதும் தெரியவில்லை.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சமூக ஊடக புதிய நெறிமுறைகள் தனியுரிமை நோக்கில் வல்லுனர்களால் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இது அரசு தணிக்கைக்கு வழிவகுக்குலாம் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக டிஜிட்டல் செய்தி மேடைகளை இந்த கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்