தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தொலைபேசி வாயிலாக பேசிய போது இதனை அவர் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரினார். ஆக்சிஜன் தொடர்பான தமிழக முதல்வரின் கோரிக்கையை உடனடியாக பரிசீலிப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் அதிகளவில் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தொற்றால் அதிகம் பாதிக்கப்படாத நோயாளிகளை வீட்டிலேயே வைத்து கண்காணிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 27,000 த்தை நெருங்கிய நிலையில், 17 வயது சிறுவன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 60 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கொரோனாவை தடுக்கும் நோக்கில் மே 10 முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்