நியூசிலாந்துக்கு எதிராக சவுத்தாம்டனில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டத்தில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டத. இதனையடுத்து நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனால் இந்தியாவின் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இருவரும் நிதானமாகவும், அதே நேரத்தில் ரன்களையும் சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது.
அப்போது ரோகித் சர்மா 34 ரன்னில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து சுப்மன் கில்லும் 28 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய புஜாரா 8 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி - ரஹானே பொறுப்புடன் விளையாடினர். இந்த ஜோடி நிதானமாக விளையாடி 58 ரன்கள் சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 146 ஆக இருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முன்னதாக முடித்துக் கொள்ளப்பட்டது.
இரண்டாம் நாளில் இந்தியா 66.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 44 ரன்னுடனும், ரஹானே 29 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். நியூசிலாந்து சார்பில் போல்ட், ஜேமிசன் மற்றும் வாக்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்