அரசுப் பள்ளிகளை நோக்கி தனியார் பள்ளி மாணவர்கள் படையெடுத்து வருவதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் இளமாறன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு அரசு எடுத்து வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் காரணமாக தனியார் பள்ளி மாணவர்கள், சிபிஎஸ்சி மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள். பெற்றோர்கள் மத்தியில் அரசுப் பள்ளிகளின் மீது ஏற்பட்டுள்ளத் தாக்கம் வரவேற்புக்குரியது.

கடந்த காலங்களில் தனியார் பள்ளிகளின் மீதிருந்த மோகம் படிப்படியாகக் குறைந்து அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. இதன் தாக்கத்தின் எதிரொலியாகப் பல தனியார் பள்ளிகள் மூடும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும் அரசின் அதிரடி நடவடிக்கையாக அரசுப் பள்ளிகளில் சேர, எட்டாம் வகுப்பு வரை மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என்ற அறிவிப்பு பெற்றோர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்து 9 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு சான்றிதழ் தர பெருந்தொகைக் கேட்டு நச்சரிக்கிறார்கள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்துத் தவிக்கும் பெற்றோர்களின் அபயக்குரல் வருத்தமளிக்கிறது. ஆகையால் அப்பள்ளிகள் EMIS எண்ணை Common pool போடாவிட்டாலும் அரசு 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆதார் அட்டை மூலம் EMIS எண்ணை எடுக்கும் வகையில் மாற்றியமைத்து உதவிடும்படி முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.''
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்