Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சிறையில் சொகுசு வசதிகள்? முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்

நடிகை கொடுத்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திடீரென சைதாப்பேட்டை கிளை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நடிகை ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கடந்த 20-ஆம் தேதி பெங்களூவில் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் திடீரென அவர் சைதாப்பேட்டை கிளைச்சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சைதாப்பேட்டை கிளைச் சிறையில் உயரதிகாரிகள் ஆய்வு நடத்திய போது, ஏசி, சோபா, மொபைல் சார்ஜர் உள்ளிட்ட சகல வசதிகளோடு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சொகுசு வசதிகளை செய்து கொடுத்த காவலர்கள் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.

அதே நேரத்தில் கொரோனா காலத்தில் கடைப்பிடிக்கப்படும் வழக்கமான நடைமுறையால் அவர் கிளைச் சிறையில் இருந்து மாற்றப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே மணிகண்டனை 5 நாட்கள் காவலில் எடுக்க காவல்துறையினர் தாக்கல் செய்த மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்காக அவர் புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு சைதாபேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்