புதிய ஒழுங்கு விதிகளுக்கு இணங்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய ஒழுங்கு விதிகளை கடந்த பிப்ரவரியில் அறிவித்தது. புதிய விதிகளை ஏற்றுக் கொள்ள சமூக வலைதளங்களுக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலக்கெடு கடந்த மே 25-ம் தேதியுடன் நிறைவடைந்து, புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
புதிய விதிகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ள கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவை குறைதீர்க்கும் அலுவலர்களை பணியில் அமர்த்தியுள்ளன. அனைத்து சமூக வலைதளங்களும் மத்திய அரசின் புதிய ஒழுங்கு விதிகளை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், ட்விட்டர் நிறுவனம் இதுவரை குறைதீர்க்கும் அலுவலர்களை நியமிக்கவில்லை.

இந்த நிலையில், புதிய விதிகளின் படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதை ஏற்க ட்விட்டர் நிறுவனம் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்