Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மகுடம் சூடிய தமிழ்… இந்திய அரசால் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட நாள் இன்று

06.06.2004 அன்று தமிழ் மொழி செம்மொழி என்று இந்திய நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. செம்மொழிக்கான தகுதிகள் என்ன என்று பார்ப்போம்..

உலகில் 7000க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தாலும், உயர்தனி செம்மொழி எனும் சிறப்புடைய மொழிகளாக சில மொழிகளே உள்ளன. உலகில் உள்ள மொழிகளில் கிரேக்க மொழி, இலத்தீன் மொழி, எபிரேய மொழி, சீனமொழி, பாரசீக மொழி, அரபு மொழி, தமிழ்மொழி, சமஸ்கிருதம் உள்ளிட்டவையே பழமையான மொழிகளாக உள்ளன. இதில் பல மொழிகள் தற்போது பேச்சு வழக்கில் இல்லை, ஆனால் தமிழ், சீனமொழி, அரபு மொழி உள்ளிட்ட சில மொழிகள் இப்போதும் பெரும்பாலான மக்கள் பேசும் மொழியாக உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை மூத்த மொழிகளாக தமிழ் மொழியும், சம்ஸ்கிருதமும் உள்ளன. தமிழ்மொழி குடும்பத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு போன்ற மொழிகள் வழக்கில் உள்ளன. அதுபோல பல வட இந்தியமொழிகளின் மூலமாக சம்ஸ்கிருதம் அழைக்கப்படுகிறது.

image

ஒரு மொழியை செம்மொழி என அடையாளப்படுத்த மொழி அறிஞர்கள் 11 தகுதிகளை வகைப்படுத்துகின்றனர்.  

  1. மொழியின் பழமை
  2. கிளைமொழிகளின் தாய்மொழி
  3. பிறமொழிகளை சாராது தனித்து இயங்கும் தன்மை
  4. பிறமொழிகளிலிருந்து சிறப்பால் வேறுபடுதல்
  5. மொழி இலக்கண கோட்பாடுகள் உடைமை
  6. பிறமொழியாளர்க்கும் பொருந்தும் இலக்கியப் பொதுமை
  7. பட்டறிவு இலக்கியங்கள்
  8. சமய சார்பின்மை
  9. நடுநிலையான இலக்கியங்கள்
  10. உயர்சிந்தனைகளை வழங்கும் இலக்கியங்கள்
  11. கலை இலக்கிய மேன்மை. ஆகியவையே அளவுகோல்களாக கொள்ளப்படுகிறது.

மேற்சொன்ன அத்தனை தகுதிகளோடும் தமிழ்மொழி தற்போதுவரை இயங்கி வருகிறது என்பதுதான் உலக மொழியியல் அறிஞர்களின் ஆச்சர்யமாக உள்ளது. எனவே 4ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான வரலாறும், இலக்கிய ஆதாரங்களும் கொண்ட தமிழ்மொழியை செம்மொழியாக அறிவிக்கவேண்டும் என 1902 ஆம் ஆண்டு பரிதிமாற் கலைஞர் முதன்முதலில் குரல் எழுப்பினார், அதனை தொடர்ந்து மறைமலை அடிகள் உள்ளிட்ட பல தமிழறிஞர்கள், தலைவர்கள் தொடர்ந்து ஒரு நூற்றாண்டு காலமாக இந்த கோரிக்கையை முன்வைத்து வந்தனர், இந்த சூழலில்தான் 2004 ஆம் ஆண்டு தமிழ்மொழி, செம்மொழியாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

image

இந்தியாவின் பழமையான மொழி என சம்ஸ்கிருதத்துக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டாலும், செம்மொழி என இந்திய அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ்தான். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 - ம் ஆண்டில் ஜூன் 6 ஆம் தேதி அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இந்த அறிவிப்பை வெளியிட்டார், அதன்பின்னர் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி இந்த அறிவிப்பு அரசாணையாக வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து இந்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் 2008 ஆம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட தொடங்கியது.

தமிழை செம்மொழியாக அங்கீகரித்தவுடன் மத்திய அரசு செம்மொழிகளின் தகுதிகள் குறித்த பல அளவீடுகளை குறைத்தது இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் சம்ஸ்கிருதம்,கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகளும் இந்தியாவின் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வீரமணி சுந்தரசோழன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்