Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“505 அறிவிப்புகள்; முக்கியமானவற்றை கூட நிறைவேற்றவில்லை” - திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை, திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவில்லை எனக்கூறி தமிழக அரசுக்கு எதிராக அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

திமுக அரசை கண்டித்து தேனி மாவட்டம் போடியில் தனது இல்லம் முன்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனது இல்லம் முன்பு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 505 தேர்தல் வாக்குறுதியில் முக்கியமானவற்றை கூட நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வதாகக் கூறிவிட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் கண்துடைப்புக்காக ஒரு கமிஷனை அமைத்துவிட்டு அறிக்கை தந்துள்ளார்.

நீட் தேர்வு, கல்விக் கடன் ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மின் கணக்கீடு உள்ளிட்ட எந்த கோரிக்கைகளையும் திமுக அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு மாணவர்களையும் பெற்றோரையும் தொடர்ந்து குழப்பி வருகிறது. சட்டப்பேரவையில் இதுகுறித்து கேட்டதற்கு மழுப்பலான பதிலே கிடைத்தது. அப்போது தெரிவித்திருந்தால் கூட மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக இருப்பார்கள். ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் திமுக அரசு எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதால்தான் போராட்டம் நடத்தப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தில் தற்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும். மின் கணக்கீட்டு முறையில் ஏகப்பட்ட குளறுபடி நடப்பதாக தமிழகம் முழுவதிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இதனை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு மற்றும் பொய் வழக்குப்போடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். மக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் இருப்பதை மறந்துவிட்டு திமுகவினர் பேசக்கூடாது.

அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிக்காகவே கடன் வாங்கப்படுகிறது. இதனைக் கடன் என்ற நோக்கில் பார்க்காமல் முதலீடாகவே பார்க்க வேண்டும். நூற்றுக்கு அறுபது சதவீத கடன்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக வாங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அனைத்து சாதியினருக்கும் உரிய முறையில் இட ஒதுக்கீடு கிடைக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஊடகங்கள் ஆளுங்கட்சிக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை எதிர்க்கட்சிக்கும் அளிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற முடியும்” எனத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்