நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஹெச்.ராஜா மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “கடந்த 2018ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோவில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது மேடை அமைப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. அது தொடர்பாக திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் என் மீது அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல்நிலையத்தில் என் மீதும் பல்வேறு நபர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் தவறான முறையில் பேசியதற்காக ஏற்கனவே நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரப்பட்டது.
தற்போது, இந்த வழக்கில் திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த குற்றப் பத்திரிக்கையில் நான் தலைமறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக கீழமை நீதிமன்றம் ஜுலை 23ல் ஆஜராகுமாறு எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது. எனவே, இந்த வழக்கில் காவல்துறையினர் என்னை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்." எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மனுதாரர் நீதிமன்றம், காவல்துறையை அவதூறாக பேசியுள்ளார். மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் சம்மன் தான் அனுப்பியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்” எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்