Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நீட் தேர்வு: விளம்பரத்திற்காகவே பாஜக வழக்கு: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு

நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கு ஜனநாயத்தை ஒடுக்கும் முயற்சி என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

நீட் தேர்வு பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் குடும்பநலத் துறையின் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனின் பதில் மனுவை அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அரசு வழக்கறிஞர் பி.முத்துக்குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

அதில், ’’நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய குழுவை நியமித்ததன் மூலம் மனுதாரரின் அடிப்படை உரிமைகள், சட்ட உரிமைகள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மனுவில் தெரிவிக்கவில்லை.

மேலும் குழுவின் அறிக்கை, அரசின் நடவடிக்கைகள் குறித்து யூகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசியல் கட்சியை சேர்ந்த அவர் இந்த விவகாரத்தில் பொதுநலன் எப்படி பாதிக்கப்பட்டது என்பதை தெரிவிக்கவில்லை. நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு 84343 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. அதில் நீட் பாதிப்பு குறித்து பெற்றோரும், மாணவர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஆனால் மனுதாரர் ஒரு மாணவரோ, பெற்றோரோ இல்லை. அரசியல் கட்சியின் நிர்வாகியான அவர் விளம்பரத்திற்காக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.

image

மேலும், நீட் தேர்வின் தாக்கம் குறித்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் குறைகளை கேட்கவேண்டும் என்ற அடிப்படையில், மக்கள் நலன் சார்ந்தே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு நியமனத்தை எதிர்த்து வழக்கு என்ற போர்வையில் நல்லாட்சி வழங்கும் அரசின் அதிகாரத்திலும், அரசியல் சாசன அடிப்படைப் பணிகளிலும் தலையிடும் வகையில் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

நீதிபதி ஏ.கே.ராஜன் குழு நியமனத்தில் அரசியல்சாசனத்தின் எந்த அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை. மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டே குழு நியமிக்கப்பட்டு உள்ளது. குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பிறகுதான் அரசு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும். கிராமப்புற மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்கள் எழுப்பியுள்ள பிரச்னை குறித்து ஆய்வுசெய்ய குழு நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு ஜனநாயத்தை ஒடுக்கும் முயற்சியாகும்.

தொழிற்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தும் முறை 1984ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்துவந்தது. ஆனால் 2006ஆம் ஆண்டு முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

image

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது கிராமப்புற மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று பயிற்சிபெற இயலாத நிலை உள்ளதாக அரசுக்கு மனுக்கள் வந்தது. பாடபுத்தகங்கள், பயிற்றுவிக்கும் முறை, தேர்வு நடைமுறை, மதிப்பீடு அனைத்திலும் தமிழக கல்வி வாரியத்திற்கும், பிற கல்வி வாரியங்களுக்கும் இடையே வித்தியாசங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளை எழுதிய பின்னரே நீட் தேர்வில் தேர்ச்சி அடைவதாக அந்த மனுக்களில் கூறியுள்ளனர்.

எனவே மருத்துவ படிப்பில் தற்போதைய நிலையை ஆராயவும், அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பை உறுதிசெய்யவும் ஒரு ஆய்வு அவசியம் என்பதால் மட்டுமே இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வு அரசு பள்ளி மற்றும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பதை ஆராய்வதற்கு மட்டுமே இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது என கூறமுடியாது. குழு, அரசுக்கு அறிக்கை அளிக்காத நிலையில், மனுதாரர் கரு. நாகராஜன் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே அதை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என பதில் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்