Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அக்.26-ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: மழை காரணமாக இதுவரை 39பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் 26ஆம் தேதியையொட்டி தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 22 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
image
வங்கக்கடல் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ்அடுக்கில், வரும் அக்டோபர் 26ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் வரும் அக்டோபர் 26ஆம் தேதியை ஒட்டி தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதனிடையே, தமிழகத்தில் கடந்த 19 நாட்களில் மழையின் காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. மேலும், 429 குடிசை வீடுகள் பகுதியாகவும், 56 குடிசைகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்