Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டெல்லியில் தீபாவளிக்கு முன்னரே அபாய அளவை தாண்டிய காற்று மாசு

தீபாவளி கொண்டாட்டம் துவங்கும் முன்னரே தலைநகர் டெல்லியில் காற்றின் மாசுபாடு அபாய அளவை தாண்டி உள்ளது.
 
நாட்டின் தலைநகரான டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. தீபாவளி நெருங்குவதால் பட்டாசு வெடிப்பதன் மூலம் காற்று மாசு மேலும் அதிகரிக்க அதிகளவில் வாய்ப்புள்ளது. இதனால், டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி அன்று டெல்லியில் பட்டாசுகளை வெடிக்கவும், விற்பனை செய்யவும் 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டது. எனினும் , தீபாவளி கொண்டாட்டம் துவங்கும் முன்னரே டெல்லியில் காற்றின் மாசுபாடு அபாய அளவை தாண்டி உள்ளது. காற்று தரம் மற்றும் பருவநிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் டெல்லியின் காற்றின் தரம் அடுத்த இரண்டு நாட்களில் 'மோசமான' வகைக்கு சென்றடையக்கூடும் என எச்சரித்துள்ளது.
 
image
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, டெல்லியின் காற்றின் தரக் குறியீடு (AQI) புதன்கிழமை அன்று 195 ஆகப் பதிவாகியிருந்தது. இது குறைந்த அளவு மாசு இருப்பதாக கருதும் அளவுகோலாகும். டெல்லியில் உள்ள சாந்தினி சவுக்கு பகுதியில் காற்று மாசுபாட்டின் அளவு 242 ஆகவும், ஜஹாங்கிர்புரியில் 257 ஆகவும் பதிவாகியுள்ளது. வட மாநிலங்களில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக காற்று மாசு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்துள்ள தர நிர்ணய கட்டுப்பாடுகளின்படி நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள நுண்துகள்களின் அளவு 0-50 ஆக (Air Quality Index) இருந்தால் தூய காற்று என வரையறுக்கப்பட்டுள்ளது. காற்றில் 50 முதல் 100 வரை இருந்தால் அந்த காற்று சுவாசிக்கத்தக்கது. 101 முதல் 200 வரை காற்றில் நுண்துகள்கள் பரவியிருந்தால் குறைந்த அளவு மாசு இருப்பதாக கருதலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 201 முதல் 300-ஆக இருந்தால் அது மாசடைந்த காற்றாகும். 301 முதல் 400 பிஎம் வரை இருந்தால் சுவாசிக்கக் கூடாத மோசமான காற்று என வரையறை செய்யப்பட்டுள்ளது. காற்றில் உள்ள நுண்துகள்களின் அளவு 401 முதல் 500 பிஎம் வரை இருந்தால், காற்று மாசு அபாயக்கட்டத்தை எட்டிவிட்டது எனவும், இந்த அளவு மாசு உள்ள காற்றை சுவாசிக்க கூடாது எனவும் மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்