Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்" - வலுத்த எதிர்ப்பு; பணிந்த சொமேட்டோ

இந்தியர்கள் அனைவரும் இந்தி மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என வாடிக்கையாளருக்கு , உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ அறிவுரை கூறி இருப்பதற்கு கண்டனம் வலுத்து வருகிறது. இதையடுத்து அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்பவர், சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் ஆர்டர் செய்த உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் சொமேட்டோவின் வாடிக்கையாளர் மையத்தை அணுகி பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது மொழி பிரச்னை இருப்பதாக சொமோட்டோ நிறுவனம் கூற , தமிழ்நாட்டில் சேவை வழங்கும் நீங்கள் தமிழ் மொழி தெரிந்தவர்களை பணிக்கு அமர்த்தி இருக்க வேண்டும் என விகாஷ் கூறியுள்ளார். அதற்கு இந்தி நாட்டின் தேசிய மொழி. இந்தியர்கள் அனைவரும் இந்தி மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என சொமேட்டோ நிறுவனம் பதில் அளித்துள்ளது. இதனை படமாக எடுத்து விகாஷ் சமூகவலைதளங்களில் பதிவிட, சொமேட்டோவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Image

இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி,  ''குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டு வருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை'' என்று கண்டனம் தெரிவித்துள்ளார். 

பலரும் சொமேட்டோவின் இந்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சொமோட்டோ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ''வணக்கம்‌ தமிழ்நாடு! ....எங்கள்‌ வாடிக்கையாளர்‌ சேவை முகவரின்‌ நடத்தைக்கு வருந்துகிறோம்‌. வேற்றுமையில்‌ ஒற்றுமை என்ற நம்‌ தேசத்தின்‌ மாறுபட்ட கலாச்சாரத்தின்‌ மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம்‌ காட்டிய ஊழியரை பணிநீக்கம்‌ செய்துள்ளோம்‌. பணிநீக்கம்‌ என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம்‌. மேலும்‌ மக்களின்‌ உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப்‌ பகிரக்கூடாது எனத்‌ தெளிவாக நாங்கள்‌ எங்கள்‌ முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்‌.

image

இந்த வாடிக்கையாளர்‌ சேவை முகவரின்‌ அறிக்கைகள்‌ மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின்‌ நிலைப்பாட்டைக்‌ குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக, நாங்கள்‌ முழு பயன்பாட்டிற்காக தமிழ்‌ செயலியை உருவாக்குகிறோம்‌. நாங்கள்‌ ஏற்கெனவே மாநிலத்திற்கான தமிழில்‌ சந்தைப்படுத்தல்‌ முயற்சிகளை உள்ளூர் மயமாக்கியுள்ளோம்‌. 

எ.கா. நாங்கள்‌ மாநிலத்திற்கான உள்ளூர்‌ பிராண்ட்‌ அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம்‌. மேலும்‌ கோயம்புத்தூரில்‌ ஒரு உள்ளூர்‌ தமிழர்‌ கால்‌ சென்ட்டர்‌ / சர்வீஸ்‌ சென்ட்டரை உருவாக்கும்‌ பணியில்‌ உள்ளோம்‌. உணவு மற்றும்‌ மொழி ஒவ்வொரு மாநிலத்தின்‌, கலாச்சாரத்தின்‌ இரண்டு அடித்தளங்கள்‌ என்பதை நாங்கள்‌ புரிந்துள்ளோம்‌. அவை இரண்டையும்‌ நாங்கள்‌ முழுமையாக உணர்ந்துள்ளோம்‌ என மீண்டும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌'' என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்