கோமாரி தடுப்பூசியை மத்திய அரசு வழங்கவில்லை என்று அமைச்சர் கூறுவது பொய், அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான கோமாரி தடுப்பூசியை வழங்கியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டை மேட்டில் பாஜக சார்பில் இயற்கை விவசாயம் குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, ''தமிழகத்தில் விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும், அதற்கு தமிழக அரசும் ஊக்கமளித்து வட்டாரத்திற்கு ஒரு ஊராட்சியை தேர்வு செய்து ஊக்குவிக்க வேண்டும். அதிமுக, பாஜக கூட்டணி ஒரே படகில் பயணிக்கிறது, கூட்டணியில் குழப்பம் இல்லை. கூட்டணியிலிருந்து யார் விலகினாலும் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும்.
மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு காப்பி அடித்து டப்பிங் செய்து பெயர் மாற்றி செயல்படுத்துகிறது. தேர்தல் பரப்புரையின்போது மு.க.ஸ்டாலின் பேசியதே தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழக்காக உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை பெயரளவில் மட்டுமே உள்ளது. எதுவும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆதாரம் இருந்தால் உடனடியாக குற்றப்பத்திரிக்கை செய்ய வேண்டும். கோமாரி நோய் தடுப்பூசி மத்திய அரசு தரவில்லை என மாநில அமைச்சர் கூறுவது பொய். அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான அளவு கோமாரி நோய் தடுப்பூசியை மத்திய அரசு அனுப்பி உள்ளது'' என அவர் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்