அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிலையான வளர்ச்சி இருக்கும் என்பதால், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுவே சரியான நேரம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஸ்காட்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தொழில் செய்வதற்கு தடையாக இருந்தவை தனது ஆட்சியில் நீக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார். லைசென்ஸ் முறை ஒழிக்கப்பட்டு, கார்ப்பரேட் வரிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவில் நிலையான, நம்பகமான வளர்ச்சி இருக்கும் என்பதால், முதலீடு செய்வதற்கு இதுவே தகுந்த நேரம் என உலக தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
இந்தியா, சீரான பொருளாதார வளர்ச்சியோடு மிகுந்த எச்சரிக்கையுடன் மற்றொரு கொரோனா அலையை எதிர்கொண்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் பணம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிக்க: மார்ச் மாதத்தில் 12 - 14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு திட்டம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்