விருதுநகர் அருகே வேலைக்கு சென்ற பெண் மனநலம் பாதித்து வீட்டில் முடங்கியதால் இரண்டு குழந்தைகளுடன் ஆதரவற்று தவித்து வருகிறார்.
தந்தை கைவிட்ட நிலையில் தாயும் முடங்கியதால் இப்படி ஒட்டுமொத்த குடும்ப பாரத்தையும் சுமர்ந்து வருகின்றனர் இந்த பிஞ்சு குழந்தைகளான 8 வயதான மகாலட்சுமியும் 15 வயதான சுரேஷும். ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூரைச் சேர்ந்த குருபாக்கியம் என்பவருக்கு நீண்டகாலமாக வலிப்பு நோய் உள்ளது. இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் கணவர் கனகராஜ் பிரிந்து சென்றதால், வலிப்பு நோயுடன் போராடி கட்டட வேலைக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றி வந்துள்ளார்.
ஆனால், வலிப்பு நோய் தீவிரமானதால் வேலைக்கு செல்லும் இடங்களில் அடிக்கடி கீழே விழுந்துள்ளார். வீட்டில் சமையல்செய்யும் போது வலிப்பு ஏற்பட்டு எண்ணெய் கொட்டியதால் கை, முகத்தில் பலத்த காயம் ஏற்பட அடியோடு முடங்கினார் குருபாக்கியம். இதோடு மனநலமும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவன் சுரேஷ் கட்டட வேலைக்கு செல்லும் நிலை நேர்ந்தது.
வீட்டிலேயே இருக்கும் சிறுமி மகாலட்சுமி, தனது தாய்க்கு உணவு ஊட்டுவது, தலை சீவி விடுவது, குளிக்க உதவுவது என உதவி செய்து தாய்க்கு தாயாக மாறி வருகிறார். வாடகை வீட்டில் இருக்கும் இவர்களுக்கு ரேசன் கார்டு இல்லாததால் எவ்வித உதவிகளையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த அப்பகுதி தன்னார்வலர்கள் உதவிகரம் நீட்டியதோடு சிறுவனையும் பள்ளியில் சேர்த்தனர். எனினும் நிரந்த தீர்வுபெற அரசு உதவ கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்