“கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலை சம்பவத்தில் அரசியல் உள்நோக்கம் இல்லை. அரசியல் கண்ணோட்டத்தோடு சமூக வலைத்தளங்களில் பரப்பரை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டியளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அருகே எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரபாகரன் மற்றும் பிரபு. இவர்கள் இருவரும் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இருவரும் விடுமுறையில் சொந்த ஊருக்கு சமீபத்தில் வந்துள்ளனர். கடந்த 8ம் தேதி பிரபு தனது வீட்டின் அருகே உள்ள குடிநீர் தொட்டியின் அருகில் துணிகளை துவைத்துள்ளார். அப்போது அங்கு சென்ற நாகரசம்பட்டி பேரூராட்சி வார்டு உறுப்பினர் சின்னசாமி, பிரபுவிடம் “இதென்ன துணிகள் துவைக்கும் இடமா?” என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதில் பிரபு, அவரது தாயார் கண்ணம்மாள் மற்றும் பேரூராட்சி உறுப்பினர் சின்னசாமி ஆகிய இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பேரூராட்சி உறுப்பினர் சின்னசாமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று ராணுவ வீரர்கள் பிரபு அவரது அண்ணன் மற்றோரு ராணுவ வீரர் பிரபாகரன், தாயார் கண்ணம்மாள், தந்தை மாதையன் ஆகிய நான்கு பேரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நான்கு பேரும் ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து திமுக வார்டு உறுப்பினர் சின்னசாமி உட்பட 9 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் திட்டமிட்டு திமுகவினர் ராணுவ வீரரை கொலை செய்து விட்டதாகவும், ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதனிடையே இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர், “ராணுவ வீரர் கொலை சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இக்கொலையில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. தாக்கியவர்கள், காயம் அடைந்தவர்கள், உயிரிழந்த ராணுவ வீரர், அனைவரும் நெருங்கிய உறவினர்கள்தான். சாதாரணமாக தொடங்கிய சண்டை கைகலப்பாக மாறி, கொலை வழக்காக மாறி உள்ளது. இதனை சில அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், `திட்டமிட்ட கொலை’ என அரசியல் கண்ணோட்டத்தோடு சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்து வருகின்றனர். அப்படி பரப்புரை செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்