Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

”என் குழந்தையை தூக்கிட்டு போய்ட்டாங்க”.. கர்ப்பம் ஆகாமலேயே நாடகமாடிய பெண் - காரணம் என்ன?

பூந்தமல்லி அருகே மருத்துவமனையில் பிறந்த குழந்தையை ஊழியர்கள் எடுத்துக் கொண்டதாக பெண் கூறியதால் பரபரப்பு நிலவியது. கர்ப்பம் ஆகாமலேயே அழகான குழந்தை பிறந்ததாக கணவர் குடும்பத்தை நம்ப வைத்து நாடகமாடிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி அடுத்த கண்ணப்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருப்பவர் மூர்த்தி. இவரது மனைவி உமா மகேஸ்வரி(27), இவர், நேற்று மாலை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு தனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததாகவும். இதையடுத்து குழந்தைக்கு மூச்சுத் திணறல் இருப்பதால் இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என ஊழியர்கள் எடுத்துச் சென்றதாகவும், பிரசவம் முடிந்த கையோடு மருத்துவர்கள் தன்னை டீ சாப்பிட்டு விட்டு வருமாறு கூறியதன் பேரில் வெளியே வந்த நிலையில், தனக்கு பிறந்த குழந்தையை எடுத்து வைத்து கொண்டு தனக்கு குழந்தை பிறக்கவில்லை என ஏமாற்றுவதாகக் கூறி சத்தம் போட்டார்.

image

இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், இந்த தகவலை அறிந்த உமா மகேஸ்வரியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிக அளவில் ஒன்று திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். அதற்கு முக்கிய காரணம் உமா மகேஸ்வரி தனக்கு பிறந்ததாக ஒரு குழந்தையின் புகைப்படத்தை அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்திருந்தார். அந்த புகைப்படத்தை வைத்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு பற்றி கொண்டது. இதையடுத்து திருவேற்காடு போலீசார் நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய வந்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

image

இதைத் தொடர்ந்து உமா மகேஸ்வரி கர்ப்பமானதாக கூறப்பட்ட நாள் முதல் இதுவரை இந்த மருத்துவமனையில் எந்தவித சிகிச்சைக்கும் வரவில்லை. தற்போது பிரசவத்திற்காக இந்த மருத்துவமனையில் எந்தவித அனுமதிச்சீட்டும் பெறவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் உமா மகேஸ்வரியிடம் துருவி துருவி விசாரணை செய்தனர். மேலும் குழந்தை பிறந்ததா என மருத்துவமனையில் வைத்து பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமானதற்கான அறிகுறியே இல்லை என்பதும் திருமணமாகி ஓராண்டு ஆனதால் தான் கர்ப்பம் அடைந்ததாக தனது கணவர் குடும்பத்தை நம்ப வைத்துள்ளார்.

மேலும் கர்ப்பமாக இருப்பது போலவே நடித்துள்ளார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவருக்கு சீமந்தம் செய்யப்பட்டு தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று மருத்துவமனைக்கு தனது தாயுடன் வந்தவர் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் வயிறு வலிப்பதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார். அதற்கு மருத்துவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது என அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து வெளியே சென்ற அவர், சிறிது நேரத்தில் அழகான பெண் குழந்தை பிறந்ததுள்ளதாக ஒரு குழந்தையின் புகைப்படத்தை அவரது கணவருக்கு அனுப்பியதும் தெரியவந்தது. போலீஸ் விசாரணையின் பின்னர்தான் உமாமகேஸ்வரி கர்ப்பமாக இல்லாமலேயே கர்ப்பமாக இருப்பதாகவும் குழந்தை பிறந்து இருப்பதாகவும் நாடகமாடியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

image

மனைவி நாடகமாடியதை அறிந்த அவரது கணவரும், உறவினர்களும் அங்கிருந்து சென்றனர். கர்ப்பமாகாமல் கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடி மருத்துவமனையில் பிறந்த குழந்தையை மருத்துவ ஊழியர்கள் எடுத்து வைத்து கொண்டு ஏமாற்றுவதாக பெண் நாடகம் ஆடிய சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அந்த பெண்ணையும் அவரது தாயையும் போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்