தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் உள்ள 88 ஆயிரத்து 937 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டன.
சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்களில் தொகுதிவாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மையங்களில் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி ஸ்ட்ராங் ரூம்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சீலிடப்பட்ட அந்த அறைகளுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆயுதப்படை காவலர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயில்களில் காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் சுமார் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளிலும், அதற்கு வெளியேயும் சிசிவிடி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் 2ஆம் தேதி அனைத்து மையங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்