Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிதான் பேராயுதம் - பிரதமர் மோடி

"கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் தடுப்பு மருந்துதான் மிகப்பெரிய ஆயுதம். அதிகளவிலான மக்களை தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் வலியுறுத்த வேண்டும்" என்றார் பிரதமர் மோடி.

கொரோனா பிரச்னை மற்றும் தடுப்பு மருந்து வழங்கல் குறித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுடன் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை உரையாடும்போது பேசியது:

"கொரோனா வைரஸ் பெருந்தொற்றின்போது மருத்துவர்கள், மருத்துவ - துணை மருத்துவ பணியாளர்கள் நாடு முழுவதும் ஆற்றி வரும் விலைமதிப்பில்லா சேவை மெச்சத்தக்கது. கடந்தாண்டு இதே காலகட்டத்தின்போது மருத்துவர்களின் கடின உழைப்பு மற்றும் நாடு கையாண்ட யுக்தி மூலம்தான் கொரோனா வைரஸ் அலையை கட்டுப்படுத்த முடிந்தது.

தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையை நாடு சந்தித்து வரும் வேளையில், மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் முழுமூச்சுடன் பணிபுரிந்து பல லட்சக்கணக்கானோரின் உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள்.

அத்தியாவசிய மருந்துகள், ஊசி மருந்துகளின் விநியோகம் மற்றும் ஆக்சிஜன் போதுமான அளவில் கிடைத்தல் ஆகியவற்றை உறுதி செய்ய தேவையான பல்வேறு முக்கிய முடிவுகளை மத்திய அரசு சமீபத்தில் எடுத்தது. இவை குறித்து போதுமான வழிகாட்டுதல்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

image

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் தடுப்பு மருந்துதான் மிகப்பெரிய ஆயுதம். அதிகளவிலான மக்களை தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் வலியுறுத்த வேண்டும். கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்த வதந்திகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே மருத்துவர்கள் பரப்ப வேண்டும்.

இந்த கடினமான காலகட்டத்தில் மக்கள் அச்சத்திற்கு ஆளாகி விடக்கூடாது. முறையான சிகிச்சையோடு, மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மனநல ஆலோசனையும் வழங்கப்பட வேண்டும். அவசர சிகிச்சை தேவைப்படாத இதர நோய்களுக்கு தொலைதூர சேவை மருத்துவ முறையை பயன்படுத்த வேண்டும்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் பெருந்தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இத்தகைய இடங்களில் வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாநகரங்களில் உள்ள கொரோனா மேலாண்மை அனுபவத்துடன் கூடிய மருத்துவர்கள், சேவைகள் குறைவாக உள்ள பகுதிகளில் வழிகாட்டுதல், பயிற்சிகள் மற்றும் ஆன்லைன் ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்கி விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்றார் பிரதமர் மோடி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்