குளிர் சாதன இயந்திரங்கள், எல்இடி விளக்குகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் குளிர்சாதன இயந்திரங்கள், எல்இடி விளக்குகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு ஊக்கம் தரும் வகையிலான 6,238 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்திற்கு ஒப்புதல் தரப்பட்டது. இம்முடிவால் அடுத்த 5 ஆண்டுகளில் குளிர்சாதன இயந்திர உற்பத்தி மற்றும் எல்இடி விளக்குகள் உற்பத்தியில் 7 ஆயிரத்து 920 கோடி ரூபாய் கூடுதலாக முதலீடு செய்யப்படும் என்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூடுதலாக 4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது.
இது தவிர சூரிய ஒளி மின்னுற்பத்தி சாதனங்கள் தயாரிப்புக்கும் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஒன்றரை லட்சம் வேலைகள் உருவாகும் என அரசு மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் பல்வேறு பொருட்களை சர்வதேச சந்தையில் போட்டியிட வைப்பதற்காக உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்தை மத்திய அரசு அண்மைக்காலமாக செயல்படுத்தி வருகிறது. அத்திட்டம் ஒவ்வொரு துறையாக விரிவாக்கப்பட்டு வருகிறது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்