Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சக நோயாளிக்கு ஆக்சிஜன் படுக்கையை விட்டுக் கொடுத்து பரிதாபமாக உயிரிழந்த செவிலியர்

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சக நோயாளிக்கு படுக்கையை விட்டுக் கொடுத்து செவிலியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் 9-வது மண்டலத்தில் உள்ள துணை பெருநகர மருத்துவமனையில் நகர சுகாதார செவிலியராக பணியாற்றிவந்த பவானி என்பவருக்கு கடந்த 22-04-2021 அன்று கொரோனா தொற்று ஏற்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐந்து நாட்கள் மட்டும் சிகிச்சையளித்துவிட்டு 26-04-2021 அன்று டிஸ்சார்ஜ் செய்து மருத்துவமனை நிர்வாகம், செவிலியர் பவானியை வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்.

image

பின்னர், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்துவிட்ட நிலையில் 28-04-2021 அன்று மீண்டும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். அப்போது ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு  பவானியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். "80 சதவீத நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. காப்பாற்றுவது மிகமிக கடினம். இருப்பினும் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்" என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி சிகிச்சையும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து படிப்படியாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஓரளவிற்கு உடல்நலம் தேறிய நிலையில் உங்களைவிட உயிருக்கே மிக ஆபத்தான நிலையில் பலர் படுக்கை கிடைக்காமல் மருத்துவமனைக்கு வெளியே உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களுக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்க வேண்டுமென மருத்துவமனை நிர்வாகம் கூறியதை அடுத்து தனக்கு கிடைத்த ஆக்சிஜன் படுக்கையை விட்டுக் கொடுத்து மீண்டும் வீட்டிற்கு வந்த பவானி கடந்த 12-05-2021 அன்று முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வந்துள்ளார்.

image

தொடர்ந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடந்த 19ஆம் தேதி உயிரிழந்தார். பவானியின் கணவர் கஜேந்திரன் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர். இவரும் கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். பவானி கஜேந்திரன், தனது திருமண நாளன்று உயிரிழந்தது அந்த கிராமத்தையே ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பவானி வசித்துவந்த பருத்தி குளம் கிராமத்தில் சுமார் பதினாறு நபர்களுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு அந்த கிராமம் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. முன்கள பணியாளரான செவிலியர் பவானி நோய்த் தொற்றுக்கு உயிரிழந்ததை தொடர்ந்து அவருடைய மகனுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும். இவருக்கு தேவையான உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்