Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"இந்தியாவில் ஜூலை வரை தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும்" - சீரம் நிறுவன செயல் அதிகாரி

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில், மேலும் இரண்டு - மூன்று மாதங்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் என சீரம் நிறுவனத்தின் செயலதிகாரி கூறியிருக்கிறார்.

இந்தியாவில் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி, மே 1 ம் தேதி நாடு முழுவதும் தொடங்கும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், நிலவிவரும் தட்டுப்பாடு காரணமாக, தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இன்னமும் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்படாமல் இருக்கிறது. மகாராஷ்ட்ரா, டெல்லி போன்ற மாநிலங்களிலும் தடுப்பூசி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சீரம் நிறுவனத்தின் செயலதிகாரி அதார் பூனவாலா கூறும்போது, "கோவிஷீல்டு தயாரிப்பு பணியில், ஜூலை மாதத்தில்தான் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாதத்துக்கு 60 - 70 மில்லியன் தடுப்பூசிகள் தொடங்கி 100 மில்லியன் தடுப்பூசிகள் வரை ஜூலையில் உற்பத்தி செய்யப்படும்" என கூறியுள்ளார்.

image

மேலும் பேசியிருக்கும் அவர், "இந்தியாவில் அரசியல்வாதிகள் முதல் சாமானியர்கள் வரை எல்லோருமே இந்தியாவில் கொரோனா மறைந்துக் கொண்டிருக்கிறது என்றுதான் நினைத்தார்கள். திடீரென கொரோனா பரவுமென்றோ, அதை தடுக்க தடுப்பூசி இவ்வளவு தேவைப்படும் என்றோ அங்கு யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. மட்டுமன்றி, ஜனவரியிலிருந்து அங்கே கொரோனா குறைந்துவந்த காரணத்தால், கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டோம் என எண்ணி, பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை. அதனால் அந்நாட்டு அரசும், தடுப்பூசி தயாரிப்பு பணியை எங்களுக்கு தரவில்லை. அதனால்தான் நாங்கள் குறைவாக தயாரித்திருக்கிறோம்.

இப்போது மாநில அரசிடமிருந்து தடுப்பூசி ஆர்டர்கள் வருகின்றன. எங்களிடம் ஆர்டர் வரும்பட்சத்தில், நாங்கள் அதை சரியாக கொடுத்துவிடுவோம். ஆகவே தடுப்பூசி பற்றாக்குறை விஷயத்தில், அரசியல்வாதிகளும் விமர்சகர்களும், உற்பத்தி நிறுவனங்களான எங்களை குற்றம் சுமத்துவது ஏற்கத்தக்கதல்ல' எனக்கூறியிருக்கிறார்.

கடந்த மாதம் அரசு சார்பில் 3,000 கோடி ரூபாய் தடுப்பூசி உற்பத்தியை விரிவாக்க தரப்பட்டதாகவும், அந்த ஆர்டருக்கு ஏற்ப இப்போது தாங்கள் செயல்படுவதாகவும் கூறியிருக்கிறார். "ஏற்கெனவே கடந்த மார்ச் மாத இறுதியில் இந்திய அரசு வெளிநாடுகளுக்கு தடுப்பூசி விநியோகப்பதற்கு எங்களுக்கு தடை போட்டதால், எங்களிடம் ஆர்டர் கொடுத்த நாடுகளுக்கெல்லாம் நாங்கள் தொகையை திருப்பியளித்து வருகிறோம். அடுத்த 2, 3 மாதங்களில், உற்பத்தியில் நாங்கள் ஏற்றத்தை பார்க்கவில்லை என்றால், எங்கள் நிறுவனத்துக்கு சரிவு ஏற்படும். நாங்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவோம்" எனக் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்