தமிழக காவல்துறை, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக தாமரைக் கண்ணன் பொறுப்பேற்று கொண்டார். அவர் யார், அவரின் பின்னணி பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்சின் அதிரடி இடமாற்றங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தமிழக காவல்துறையில் முக்கிய பொறுப்பான பதவியான சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக தாமரைக் கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி இன்று காலை தமிழக காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் சட்டம்- ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குநராக தாமரைக் கண்ணன் பொறுப்பெற்றுக்கொண்டார். ஏடிஜிபி ஜெயந்த் முரளி, இவருக்கு பொறுப்புகளை ஒப்படைத்தார்.
1993 பேட்ச் அதிகாரியான தாமரைக் கண்ணன் தமிழக உளவுத்துறை எஸ்பி, மயிலாப்பூர், புனித தாமஸ்மலை துணை ஆணையர், சென்னை நுண்ணறிவுப்பிரிவு கூடுதல் ஆணையர், போக்குவரத்து கூடுதல் ஆணையர், சிபிசிஐடி ஐஜி ஆகிய முக்கியப்பதவிகளை வகித்தவர்.
குறிப்பாக 2012 ஆம் ஆண்டு தாமரைக் கண்ணன் சென்னை கூடுதல் ஆணையராக இருந்த போது தொடர் வங்கிக் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த வடமாநில குற்றவாளிகளை கண்டறிந்து 5 பேரை வேளச்சேரியில் என்கவுண்டர் செய்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி ஏற்பாடு செய்த பயிற்சி திட்டத்தில் பங்கேற்ற இந்தியாவை சேர்ந்த 97 ஐபிஎஸ் அதிகாரிகளில் தாமரைக்கண்ணனும் ஒருவர்.
இதற்காக அப்போதைய முதல்வர் கருணாநிதி தாமரைக் கண்ணனை நேரில் அழைத்து பாராட்டினார். சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பதவி வகித்து வந்த ஜெயந்த் முரளிக்கு பதிலாக தாமரைக்கண்ணனை தமிழக அரசு நியமித்துள்ளது.
- சுப்ரமணியன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்