இருவார முழு ஊரடங்கை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில் வரும் 10 ஆம் தேதி 4.00 மணி முதல் 24-ஆம் தேதி காலை 4.00 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலமாக மக்களுக்கு உரையாற்றினார். அதில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
''மே 10 முதல் 24 வரை 14 நாட்களும் மக்கள் வீட்டிலேயே இருந்தால் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கலாம். 2 வாரங்களில் கொரோனா மேலும் அதிகரித்தால் நோயை கட்டுப்படுத்துவது சவாலாகி விடும். நோய் எதிர்ப்பு சக்தியை பெற சத்தான உணவுகளை உண்ண வேண்டும். 2 வாரமும் மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். மாஸ்க் அணியுங்கள்; வீட்டிலேயே இருங்கள். முழு ஊரடங்கை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்.
கொரோனா குணப்படுத்தக் கூடிய நோய்தான். மக்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனா பரவலை தடுக்க மருத்துவப் பணியாளர்கள் இரவுப்பகலாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை. முழு ஊரடங்கை அமல்படுத்தப்படா விட்டால் கொரோனா பரவலை தடுப்பது சிரமமாகிவிடும்'' என்று கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்