கொரோனா நிவாரண நிதியின் 2ஆம் தவணை மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
மறைந்த திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் 98ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். பின்னர் அவர், மு.கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திற்கும் சென்று மரியாதை செலுத்த உள்ளார்.
இதனைத்தொடர்ந்து தலைமைச் செயலகம் செல்லும் முதலமைச்சர், அங்கு பதினோரு மணியளவில் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைக்கிறார். கொரோனா நிவாரண நிதியின் 2ஆவது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டம் ஆகியவற்றையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அதே போல், ஊதியமின்றி பணிபுரியும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் ரொக்கம், அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டமும் தொடங்கி வைக்கப்படுகிறது.
மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய், மருத்துவர், மருத்துவப் பணியாளர், காவலர், நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்