Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விரைவுச் செய்திகள்: புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு | +2 தேர்வு விவகாரத்தில் இன்று முடிவு

பிளஸ் 2 தேர்வு நடத்தும் விவகாரத்தில் முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் என்று 13 கட்சிகளின் பிரதிநிதிகள், மருத்துவர்களிடம் கருத்துக்கேட்ட பின்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

+2 தேர்வு நடத்த திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு: தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு நடத்த திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஆதரவு என தகவல் வெளியாகியுள்ளது. பாஜக, சிபிஐ, சிபிஎம், பாமக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெரும்பான்மை கட்சிகளின் நிலைப்பாட்டை ஏற்பதாக அதிமுக கூறியதாகவும் கூறப்படுகிறது.

காய்கறி, மளிகை, இறைச்சி கடைகளுக்கு அனுமதி: தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காய்கறி, மளிகைக் கடைகள், இறைச்சி விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி: காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீன் சந்தைகள், இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களில் எதற்கெல்லாம் தடை?: கொரோனா பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் மெக்கானிக் கடைகள், ஹார்டுவேர் கடைகள், புத்தக கடைகள் திறக்க தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தீப்பெட்டி ஆலைகள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி: நோய் தொற்று அதிகமுள்ள கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 10% பணியாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

27 மாவட்டங்களில் சுயதொழில் செய்வோருக்கு அனுமதி: பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மின் பணியாளர்கள், பிளம்பர்கள் போன்ற சுயதொழில் செய்வோர் இ பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின் பொருட்கள் கடைகள், இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைகளும் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

27 மாவட்டங்களில் ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி: சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலத்திற்கு அவசர காரணங்களுக்கு இ-பாஸ் பெற்று பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் இயங்க தடை தொடர்கிறது: ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் பேருந்துகள், வணிக வளாகங்களுக்கான தடை தொடர்கிறது. வழிபாட்டுத் தலங்கள், முடி திருத்தும் நிலையங்கள், டாஸ்மாக் கடைகளுக்கும் தடை நீடிக்கிறது.

மதுரை எய்ம்ஸ் பணிகளை விரைந்து தொடங்குக: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு பாதிப்பு - ஆய்வு செய்ய குழு: தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை சரிசெய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி குழு ஆய்வு செய்யும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ்-உடன் ஈபிஎஸ் திடீர் சந்திப்பு: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காத நிலையில் இந்த திடீர் சந்திப்பு நடந்துள்ளது.

20ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் தடுப்பூசி போட வேண்டும்: ஜூன் 20ஆம் தேதிக்குள் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்