Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சாராய வேட்டைக்கு சென்ற இடத்தில் நகை மற்றும் பணத்தை திருடியதாக 3 காவலர்கள் மீது வழக்கு

சாராய வேட்டைக்கு சென்ற காவல்துறையினர் இரண்டு வீடுகளை உடைத்து பீரோக்களில் இருந்த 8.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 15 சவரன் நகைகளை எடுத்து சென்றதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். புகாரை அடுத்து எஸ்ஐ உட்பட 3 காவலர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க காவல் துறையினர் தொடர் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊசூர் அடுத்த குருமலையில் உள்ள நச்சுமேடு மலைகிராமத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் பேரில் அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான 4 காவலர்கள் நச்சுமேடு பகுதியில் சாராய வேட்டை நடத்தியுள்ளனர்.

image

அப்போது, சாராயம் காய்ச்சுவதாக அறியப்பட்ட இளங்கோ மற்றும் செல்வம் ஆகியோரின் வீடுகளுக்கு காவல்துறையினர் சென்று பார்த்தபோது இருவர் வீட்டில் இருந்த சுமார் 1000 லிட்டர் சாராய ஊரல், 8 மூட்டை வெல்லம், 50 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்ச தேவையான மூலப்பொருட்களையும் அழித்துள்ளனர். பின்னர் செல்வம் மற்றும் இளங்கோ ஆகிய இருவர் இல்லாததால் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.

இதனிடையே சாராய வேட்டைக்கு வந்த காவலர்கள், செல்வம் மற்றும் இளங்கோ ஆகியோரின் வீட்டில் நுழைந்து பீரோவை உடைத்து சுமார் 8.5 லட்சம் பணம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு மலையை விட்டு கீழே இறங்கிக் கொண்டிருப்பதாககூறி காவலர்களை வழிமறித்துள்ளனர். அதற்குள் இது குறித்து தகவலறிந்த பாகாயம் ஆய்வாளர் சுபா சம்பவ இடத்திற்குச் சென்று காவல் துறையினர் எடுத்ததாக கூறப்பட்ட பணம் மற்றும் நகையை செல்வம் மற்றும் இளங்கோ குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

image

சாராய வேட்டைக்கு சென்ற இடத்தில் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை காவல் துறையினர் எடுத்து சென்றதாக பொதுமக்கள் கூறிய புகாரையடுத்து வேலூர் எஸ்ஐ ஆல்பர்ட் ஜான் விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்கு பிறகு அரியூர் உதவி ஆய்வாளர் அன்பழகன், காவலர்கள் யுவராஜ், இளையராஜா உள்ளிட்ட 3 பேர் மீது, பகலில் வீட்டை உடைத்து திருடுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் அரியூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சாராய வேட்டைக்கு சென்றவர்கள் கூறுகையில், நாங்கள் சாராய வேட்டைக்கு சென்ற இடத்தில் செல்வம், இளங்கோ இருவர் சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்று சாராய ஊரல், சாராயம், வெல்லம், மற்றும் மூலப்பொருட்களை அழித்தோம். மலையைவிட்டு திரும்பிக்கொண்டிருக்கும்போது மேற்குறிப்பிட்ட இருவரது வீட்டிலும் பணம், நகை காணாமல் போனதாக எங்களுக்கு தகவல் வந்தது. அதனை அடுத்தே அங்கு சென்று அவர்கள் வீட்டில் இருந்த பணத்தையும் நகையையும் எடுத்து ஒப்படைத்தோம் எனக் கூறினர்.

image

கொரோனா பொது முடக்கத்தால் அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது;f கள்ளச்சாராயத்தை தேடி அலைகின்றனர். இதை சரியாக பயன்படுத்தும் கள்ளச்சாராய கும்பல் அணைகட்டு மலை பகுதி, பேர்ணாம்பட், குடியாத்தம் மலை பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்றுவருவதும் அதனை தடுக்க செல்லும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- ச.குமரவேல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்