புதுச்சேரியில் புதிய ஆட்சி அமைந்து 50 நாட்களுக்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. 40 ஆண்டுகளுக்குப் பின் பெண் எம்எல்ஏ ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி புதுச்சேரியின் 15ஆவது சட்டப்பேரவைக்கான தேர்தலில் வெற்றி பெற்றது. புதுச்சேரியில் ஆட்சியமைந்தபின் நீண்ட இழுபறிக்கு இடையே 5 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்து வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் தனி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சாய் சரவணகுமாரும் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் சார்பில், முன்னாள் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார் ஆகியோரும் அமைச்சர்களாகின்றனர். முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளான சந்திர பிரியங்கா, 40 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையில் இடம்பெறும் பெண் அமைச்சர் என்ற பெருமைக்குரியவராகிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்