படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த காசிமேட்டைச் சேர்ந்த 5 மீனவர்களை காப்பாற்றிய ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே. எபினேசர் மற்றும் மீனவ சங்கத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை மீன் பிடிப்பதற்காக 5 மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் கோவளத்தில் இருந்து 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிந்தபோது, ராட்சத அலையில் சிக்கி பைபர் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் படகில் இருந்து நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்த மீனவர்கள் 5 பேரும் படகு மற்றும் கேனை பிடித்துக்கொண்டு கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதைபார்த்த சக மீனவர்கள், இதுபற்றி காசிமேடு மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஆர்கே.நகர் எம்.எல்.ஏ. எபினேசருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவரது மேற்பார்வையில் மீனவ சங்கத்தினர் இரட்டை என்ஜின் கொண்ட 4 பைபர் படகுகளில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, உயிருக்கு போராடி கொண்டிருக்கும் மீனவர்களை மீட்க புறப்பட்டு சென்றனர்.
நேற்று காலை கோவளத்துக்கு அருகே 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் சுமார் 11 மணி நேரமாக கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடி கொண்டிருந்த மீனவர்கள் 5 பேரையும் பத்திரமாக மீட்டு, காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்த நிலையில், படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த காசிமேட்டைச் சேர்ந்த 5 மீனவர்களைத் தமது உடனடி நடவடிக்கையால் காப்பாற்றிய ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே. எபினேசருக்கும், மீனவ சங்கத்தினருக்கும் தனது வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்