கோவையைச் சேர்ந்த ஏ.வேலுமணியின் 'தைரோகேர் டெக்னாலஜீஸ்' நிறுவனத்தின் 66 சதவீத பங்குகளை வாங்கி இருக்கிறது, ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனமான பார்ம் ஈஸி. கோவையை சேர்ந்த ஏ.வேலுமணி தொடங்கிய நிறுவனம், 'தைரோகேர் டெக்னாலஜீஸ்'. இந்த நிறுவனம் பட்டியலிடப்பட்ட நிறுவனமும்கூட.
ஒரு பங்கினை ரூ.1300-க்கு வாங்கிக்கொள்ள பார்ம்ஈஸி முடிவெடுத்திருக்கிறது. அதன்மூலம் 66.1 சதவீத பங்குகளை ரூ.4,546 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர ஓபன் ஆபர் மூலம் சந்தையில் உள்ள 26 சதவீத பங்குகளையும் வாங்க பார்ம்ஈஸி திட்டமிட்டுள்ளது.
தைராய்டு பரிசோதனை மையமான தைரோகேருக்கு நாடு முழுவதும் 3330-க்கும் மேற்பட்ட கலெக்ஷன் மையங்கள் உள்ளன. நாடு முழுவதும் இருந்து சேகரிக்கப்படும் மாதிரிகள் மும்பையில் உள்ள லேபில் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த நிலையில், வேலுமணி 1500 கோடி ரூபாயை பார்ம் ஈஸி நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஏபிஐ ஹோல்டிங்ஸ்-ல் முதலீடு செய்திருக்கிறார். இந்த முதலீடு மூலம் ஏபிஐ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் 4.9 சதவீத பங்குகள் அவருக்கு கிடைக்கும்.
தைராய்டு வேதியியிலில் முனைவர் பட்டம் பெற்ற வேலுமணி, 14 ஆண்டுகள் பாபா அட்டாமிக் ரிசர்ச் செண்டரில் பணியாற்றிய பின், பாதுகாப்பான வேலையை விட்டு தொழில் தொடங்கினார்.
வேலுமணியின் சொந்த முயற்சியால் 1996-ம் ஆண்டு 2 லட்ச ரூபாய் முதலீட்டில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது 7600 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள நிறுவனமாக 25 ஆண்டுகளில் தைரோகேர் மாறி இருக்கிறது. இதில் 66 சதவீத பங்குகள் நிறுவனர் வேலுமணி மற்றும் குடும்பத்தினரிடம் உள்ளது. இந்த பங்குகளை ரூ.4,546 கோடிக்கு பார்ம் ஈஸி வாங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் தைரோகேர் பங்கு 6 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்