Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விரைவுச் செய்திகள்: ஊரடங்கில் புதிய தளர்வுகள் | அனைத்து எம்எல்ஏகளுக்கும் கணினி

* வகை ஒன்றில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் உள்ளன. இந்த 11 மாவட்டங்களுக்கு இடையே திருமணம் சார்ந்த பயணங்களுக்கு இ பாஸ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வகை 2, 3ல் உள்ள மாவட்டங்களில் இருந்து வகை 1ல் உள்ள மாவட்டங்களுக்கும் திருமணம் சார்ந்த பயணத்திற்கு இ- பாஸ் கட்டாயம் என அரசு கூறியுள்ளது.

* தமிழகத்தில் தொற்று பரவல் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள வகை இரண்டில் அரியலூர், கடலூர், தருமபுரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 23 மாவட்டங்கள் உள்ளன. இந்த 23 மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50 சதவிகித பயணிகளுடன் பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* ஒரே நாளில் 5,755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரே நாளில் 5 ஆயிரத்து 755 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 211 பேர் 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் ஆவர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 லட்சத்து 55 ஆயிரத்து 332 ஆக அதிகரித்துள்ளது. 8 ஆயிரத்து 132 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் 150 பேர் உயிரிழந்துள்ளனர். 47 ஆயிரத்து 318 பேர் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் எம்.பிஎல் படிப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

* கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தொழிற்சாலைகளில் மின் கட்டணத்தைக் கணக்கெடுக்க மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பிரித்துள்ள வகை ஒன்றில் உள்ள மாவட்டங்களில் அனைத்து தொழிற்சாலை மற்றும் தாழ்வழுத்த வணிக மின் நுகர்வோருக்கு, ஜூன் மாத கட்டணம் கணக்கீடு செய்யப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* சட்டப்பேரவை தேர்தலை போல உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலாயத்தில், திமுக மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, விடுபட்ட 9 மாவட்டங்களில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

* தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நோய் தடுப்பு மைய இயக்குநர் டாக்டர் எஸ்.கே.சிங், இந்தியாவில் இதுவரை 50 பேர் டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

* மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் கடந்த மாதம் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டார். போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், குண்டர் சட்டத்தின் கீழும் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் வழங்கப்படும் கையடக்க கணிணி , சட்டப்பேரவையில் அவர்கள் அமரும் இடத்தில் நிரந்தரமாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 'காகிதமில்லா சட்டமன்றம்' என்ற அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. தமிழக அரசின் மின்னணு நிறுவனமான எல்காட் மூலம் இந்த கையடக்க கணினிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

* கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை தொட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இன்றைய தினம் ஓசூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 79 காசுக்கும், டீசல் 94 ரூபாய் 76 காசுக்கும் விற்பனையானது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், ஷேர் ஆட்டோ ஓட்டு்நர்களும் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்