கொரோனா பாதித்து, தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்குத் தேவையான திரவ உணவுகள் 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் கோவிட் தொற்றால் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் இதுவரை 3 லட்சத்து 26 ஆயிரத்து113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதைக் கடந்தோருக்கு இயல்பாகவே மற்றவர்களைப் போல் பூரி , பொங்கல் என வழக்கமான உணவுகளை உண்ணுதல் ஏற்புடையதல்ல எனும் போது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுவிட சிரமமான நிலையில் இருக்கும் போது திரவ உணவுகள் தான் தேவைப்படுகின்றன.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அவ்வப்போது அரிசிக் கஞ்சி வழங்கப்பட்டாலும், எல்லா நேரங்களிலும் நோயாளிகளின் தேவைக்கேற்ப கிடைப்பதில்லை என்ற குறை இருக்கிறது. பசியோடு கோவிட் நோயாளிகள் கேட்கும்போது என்ன செய்வதென தெரியாமல் தவிக்கிறார்கள் குடும்ப உறுப்பினர்கள்.
இதனைத் தடுக்க, கஞ்சி போன்ற உணவுகள் மருத்துவமனையிலோ, அருகிலோ கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள் கோவிட் நோயாளிகளின் உறவினர்கள்.
மருந்தும் சிகிச்சையும் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு வயதான நோயாளிக்கு தேவையான சத்தான உணவு கிடைப்பதும் பிரதானம். ஆரோக்கியமான சத்தான உணவு கிடைப்பது இறப்பு விகிதத்தை குறைக்க உதவும் என்பதும் மருத்துவர்கள் அறிவுரை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்