உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவரை இன்று சந்தித்து பேசுகிறார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு நாளுக்கு நாள் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான அதிருப்தி அலை அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் யோகி ஆதித்யநாத் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில் அவர் மீது பாஜக தலைமை அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் யோகி ஆதித்யநாத்தை முதல்வர் வேட்பாளராக மீண்டும் நிறுத்துவதற்கு பாஜக தலைவர்கள் பலர் விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி மேலிடத்தை சந்திப்பதற்காக யோகி ஆதித்யநாத் அங்கு முகாமிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் யோகி ஆதித்யநாத் நேற்று சந்தித்து பேசினார். இதனைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை எண் 7, லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 10.45 மணியளவில் யோகி ஆதித்யநாத் சந்தித்து பேசுகிறார். அதன்பின், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை நண்பகல் 12 மணியளவில் சந்தித்து பேச இருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்