இந்தியாவிலேயே மோசமான மொழி என்ன என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடினால் கன்னட மொழி காட்டப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
கூகுள் தேடலில் What is the ugliest language in India (இந்தியாவின் மோசமான மொழி எது) என தேடினால் கன்னட மொழியை கூகுள் காட்டியிருந்தது. இந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கன்னட மொழி பேசும் மக்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என காட்டியதற்கு கன்னட மொழி வளர்ச்சி அமைச்சர் அரவிந்த் லிம்பவலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கூகுள் நிறுவனம் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் அவர் எச்சரித்தார். சமூகவலைத்தளங்களில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக கன்னட மக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என காட்டப்பட்டதற்கு கூகுள் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் விளக்கமளிக்கையில், கன்னட மொழி மோசமான மொழி என்பது கூகுளின் கருத்து இல்லை. இது போன்று கூகுள் தேடுதல் தளத்தில் எதிர்பாராத விதமாக நடந்து விடுகிறது. இச்சம்பவத்திற்காக கூகுள் கன்னட மொழியை தாய்மொழியாக கொண்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது' எனத் தெரிவித்துள்ளது. மேலும், கன்னட மொழி தொடர்பாக கூகுள் தேடு தளத்தில் வெளியான தவறான பதிவுகளையும் கூகுள் நீக்கியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்