சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதிமுக மூத்த நிர்வாகி மதுசூதனனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் சசிகலா. அதேநேரத்தில் அங்கு எடப்பாடி பழனிசாமியும் ஏற்கெனவே சென்றிருந்ததால், சில நிமிடங்களுக்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை நேரில் சென்று விசாரித்துள்ளார் சசிகலா. மதுசூதனனுக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுசூதனின் உடல்நிலை தொடர்பாக சில வதந்திகள் பரவிய நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என அதிமுக இன்று காலை தெரிவித்திருந்தது. மதுசூதனனுக்கு தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளதாகவும் அதிமுக கூறியுள்ளது.
கழக அவைதலைவர் திரு. மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம்,
— AIADMK (@AIADMKOfficial) July 20, 2021
தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சசிகலா அப்போலோ சென்ற அதேநேரத்தில் அங்கு இருந்ததால் அங்கு சில நிமிடங்களுக்கு பரபரப்பு ஏற்பட்டது. சசிகலா எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வந்த காரணத்தால், அவரின் ஆதரவாளர்களோ அமமுக நிர்வாகிகளோ யாரும் அங்கு இருக்கவில்லை. நேரடியாக மதுசூதனின் குடும்ப உறுப்பினர்களை கண்டு, உடல்நலன் குறித்து கேட்டறிந்துவிட்டு விரைந்து திரும்பிவிட்டார் சசிகலா.
மதுசூதனின் உடல்நலனை விசாரித்த பின்னர் பத்திரிகையாளரை சந்தித்த சசிகலா, “மதுசூதனன், அதிமுக மீது அதிமுக மிகுந்த பற்றுக்கொண்டவர். அவருக்கு உடல்நலன் குன்றியதாக அறிந்ததால் நேரில் வந்து விசாரித்தேன். அவர் விரைவில் நலன் பெற வேண்டும்” எனக்கூறினார். முன்னராக நேற்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். நேரில் சென்று மதுசூதனனை விசாரித்திருந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்