Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘புது உறுப்பினர்களை அறிமுகம் செய்யக்கூட முடியாத நிலை’ - கடும் அமளி; முடங்கிய நாடாளுமன்றம்

முதல் நாளே எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றமே முடங்கி போனது.

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரில் பங்கேற்க குடையோடு நாடாளுமன்றம் வந்தார் பிரதமர் மோடி. அப்போது நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு கொட்டும் மழையில் செய்தியாளர்களை சந்தித்த மோடி, “மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடினமான கேள்விகளை கேட்கட்டும்; ஆனால் அமைதியான முறையில் விவாதம் நடக்க ஒத்துழைப்பு தரவேண்டும். அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. மத்திய அரசு கூறும் விளக்கத்தையும் எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொள்ள வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

ஆனால் நாடாளுமன்றத்திற்குள் நடந்த கதையே வேறு. நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது மக்களவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜய் வசந்த் உள்ளிட்ட 3 உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

image

அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிறகு நாடாளுமன்றம் முதல் முறை கூடுவதால் புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்துவதாக இருந்தது. இது எப்போதும் நடைபெறும் சாதாரணமான வழக்கம்தான். ஆனால் அதற்கு எதிர்க்கட்சிகள் இடம் தரவில்லை. புதியவர்களை அறிமுகம் செய்து வைக்க வருமாறு சபாநாயகர் பிரதமருக்கு அழைப்பு விடுத்தார். புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்து பிரதமர் பேச ஆரம்பித்தார். ஆனால், விலைவாசி உயர்வு, விவசாய சட்டங்கள் வாபஸ், தொலைபேசி ஒட்டுக்கேட்பு உள்ளிட்டவை பற்றி விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட ஆரம்பித்தனர். இதனால் பிரதமர் உரை தடைபட்டது.

தனது அமைச்சரவையில் பட்டியலின வகுப்பினர், விவசாயிகள், பெண்கள் பலர் இடம்பெற்றது எதிர்க்கட்சியினருக்கு பிடிக்கவில்லை என்றும் எனவேதான் அமளியில் ஈடுபடுகின்றனர் என்றும் பிரதமர் விமர்சித்தார். இதைத்தொடர்ந்தும் அமளி நிலவியதால் பிரதமர் தன் உரையை அறிக்கையாக தாக்கல் செய்வதாக கூறினார். இதன் பின் அவையை 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். அடுத்தடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. கேள்வி நேரம், ஜீரோ ஹவர் என எதுவும் நடக்கவில்லை. 3.30 மணிக்கு மக்களவை கூடியபோது, மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். மத்திய நாடாளுமன்றத்துறை அமைச்சர் பிரகலா ஜோஷி தலையிட்டு அனைத்து விவாதங்களையும் விவாதிக்க தயார் எனவும் எதிர்க்கட்சியினர் தங்களது அமளிகளை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

image

அந்த சமயத்தில் புதிய ஐ.டி மற்றும் எலெக்ட்ரானிக் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேசுவதற்கு அனுமதி கேட்டார். சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதியளித்த பிறகு உளவு பார்த்த புகார் தொடர்பாக விளக்கம் அளித்த அஷ்வினி வைஷ்ணவ், “ஊடகங்களில் வெளிவந்திருக்கும் தகவல் சரியில்லை. மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை. மென்பொருள் நிறுவனமே எந்தெந்த நாடுகளில் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது என்று வெளியிடப்பட்டிருக்கும் தகவல் தவறு எனக்கூறியிருக்கிறது. ஆகவே அந்த பட்டியலில் இந்தியா இடம்பெற்றிருப்பது மறுக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் மூலமாக யாருடைய அலைப்பேசியையாவது உளவு பார்த்திருந்தால் அதை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்த பின்னரே உளவு பார்க்க முடியும். அப்படியில்லாத சூழ்நிலையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அர்த்தமில்லாதது. ஒருவருடைய அலைப்பேசியை உளவு பார்க்கவேண்டும் என்றால் மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகள் உள்ளது. அந்த விதிகளை மீறி மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாரையும் உளவு பார்க்கவில்லை” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் மக்களவை, நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

image

இதேபோல் காலை மாநிலங்களவை தொடங்கியதும் கேரளாவைச் சேர்ந்த புது உறுப்பினர் பதவி ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து அலுவல்கள் தொடங்கியபோது புதிய அமைச்சர்களை பிரதமர் அறிமுகப்படுத்தினார். அப்போதும் கடும் அமளி நிலவியதால் பிரதமரின் பேச்சு தடைபட்டது. பதாகைகளை ஏந்தி அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிடவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முயற்சித்தனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனிடையே ஒரே ஒரு பில் மட்டும் நிறைவேறியது. அதாவது மெரைன் நேவிகேஷன் எய்ட்ஸ் (Marine Navigation Aids) என்ற மசோதவை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தாக்கல் செய்தார். இதன்மூலம் மீனவர்களுக்கு வழிகாட்டுதல், வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், கப்பல் போக்குவரத்து சேவைகளை நிறுவுதல், நிர்வகித்தல் உள்ளிட்ட புதிய கட்டமைப்பை வழங்க முற்படுகிறது.

இந்த மசோதா தாக்கலுக்கு பின் பேசிய தமிழக எம்.பி ஜி.கேவாசன் “தமிழகத்தில் கலங்கரை விளக்கங்கள், துறைமுகங்கள் உள்ளன. அவற்றை மேம்படுத்த வேண்டும். மீனவர்களுக்கு உதவ வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இதனிடையே பாஜகவின் மாநிலங்களவை தலைவராக இருந்த தாவர் சண்ட் கெலாட் அண்மையில் கர்நாடக மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் அந்த பதவியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நியமனம் செய்யப்பட்டார். இன்று அவரும் பதவியை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து தொடர்ந்து மாநிலங்களவையிலும் கூச்சல் குழப்பம் நிலவியதால் நாளை காலை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்