தமிழக பாஜக எம்.எல்.ஏக்கள் உடனான சந்திப்பின் போது பிரதமர் மோடி மாநில அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஆளுநர் உரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை ஆலோசித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேரும், அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது தமிழகத்தில் புதிதாக பதவியேற்ற திமுக அரசை பற்றி விசாரித்த மோடி, புதிய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும் ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் இல்லாத விவகாரம் குறித்து பிரதமரிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் மொழி பிரச்னை காரணமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிக்கல் இருப்பதாகவும் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியிடம் கூறியுள்ளனர். பின்னர் பேசிய எல்.முருகன், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை குறிப்பிடும் போது, கமல்ஹாசனை தோற்கடித்தவர் என பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார். அப்போது பிரதமர் கமல்ஹாசன் குறித்து நலம் விசாரித்துள்ளார். பிரதமரை தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவையும் தமிழக பாஜக எம்.எல்.ஏக்கள் சந்தித்து பேசியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்