தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி(76) இன்று காலமானார்.
'எதிர்நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘பாமா விஜயம்’, ‘வெள்ளி விழா’ உட்பட ஏராளமான தமிழ்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெயந்தி. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்புக்காக 7 முறை கர்நாடக மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார்.
எம்.ஜி.ஆரு.டன் படகோட்டி, முகராசி மற்றும் ஜெமினி கணேசனுடன் கண்ணா நலமா, வெள்ளிவிழா, புன்னகை, இருகோடுகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் உள்ள தனது மகன் வீட்டில் வசித்து வந்த ஜெயந்தி கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பெங்களூருவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
இதனையடுத்து ஜெயந்தியின் மறைவுக்கு கன்னட திரையுலக நட்சத்தினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்