Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தேனி: இறந்த கருவை சுமந்த பெண்ணுக்கு தவறுதலாக தடுப்பூசி? - தீவிர சிகிச்சையில் அனுமதி

தேனியில் கர்ப்பிணியொருவருக்கு வயிற்றில் உள்ள குழந்தை இறந்தது தெரியாமல், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஊசி போட்டபிறகு விவரம் தெரியவந்ததால், உடனடியாக குழந்தையை வெளியே எடுக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி போடும் முன்பு தன் மனைவியை அரசு ஆய்வகத்தில் பரிசோதித்ததாகவும், அப்போது குழந்தை நலமுடன் இருப்பதாக சொன்ன பிறகே அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார் கர்ப்பிணியின் கணவர்.

image

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர், 26 வயதான ஜெகன். இவரது மனைவி பெயர் இருதய ரோஷினி சில்வியா (வயது 24). தற்போது போடிநாயக்கனூரில் வசிக்கும் இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர்.

ரோஷினி ஆறு மாதம் கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில், தன்னையும் குழந்தையையும் காக்க எண்ணி நேற்றைய தினம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முதலாவது தவணை செலுத்திக் கொண்டிருக்கிறார் ரோஷினி. முன்னதாக அவர் டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற அங்கு தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டிருந்திருக்கிறார்.

image

தடுப்பூசி செலுத்திய பின்னர், வழக்கமான தன் மருத்துவ பரிசோதனைகளுக்காக தனியார் ஸ்கேன் சென்டருக்கு சென்றுள்ளார் ரோஷினி. அங்கு அவருக்கு ஆறாவது மாதத்திற்கான ஸ்கேன்  செய்யப்பட்டுள்ளது. அப்போது குழந்தை எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது. ஸ்கேன் சென்டரை சேர்ந்தவர்கள், குழந்தை உயிரிழந்து விட்டதாக ரோஷினியிடம் கூறியுள்ளனர்.

image

இதனையடுத்து ஸ்கேன் பரிசோதனை முடிவுகளுடன் மீண்டும் டொம்புச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற ரோஷினியை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்திருப்பதை மீண்டும் உறுதிசெய்துள்ளனர். உடனே அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர்.

அங்கு அடுத்தடுத்த செய்யப்பட்ட ஆய்வின்போது, ஒருவாரத்திற்கு முன்னரே வயிற்றில் குழந்தை உயிரிழந்திருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறும்போது, “குழந்தை இறப்பிற்கும், தடுப்பூசி செலுத்தியதற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. குழந்தை ஒரு வாரத்திற்கு முன்னரே தாயின் வயிற்றில் உயிரிழந்திருக்கிறது. அதைப்பற்றி அறியாமல் அவர் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வந்துள்ளார்.

image

மருத்துவ நடைமுறைகளின்படி  குழந்தை பிரசவிக்கும் வரை தாய் கர்ப்பிணியாகவே கருதப்படுவார். அந்த அடிப்படையிலேயே அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டபிறகே, குழந்தை இறந்தது எங்களுக்குத் தெரியவந்தது. தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருவை வயிற்றிலிருந்து அகற்றி தாயை காப்பாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தனர்.

image

ரோஷினிக்கு ஏற்பட்ட இந்த சம்பவத்தால், அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். அதே நேரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்தபோது குழந்தை இறந்தது குறித்து எந்த தகவலும் அளிக்கப்படவில்லை எனவும், அவர்கள் பரிந்துரையின்பேரில் தான் தன் மனைவிக்கு தடுப்பூசி செலுத்தியதாகவும், தடுப்பூசி செலுத்தவதற்கு முன்பே ஏன் குழந்தை இறந்ததை மருத்துவமனை நிர்வாகம் கண்டுபிடிக்கவில்லை என்றும் ரோஷினியின் கணவர் ஜெகன் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். 

image

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

- ரமேஷ் கண்ணன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்