Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உச்ச நீதிமன்றத்தில் புதிதாக பதவியேற்ற 9 நீதிபதிகளின் பின்புலம் - ஒரு பார்வை

தமிழகத்தை சேர்ந்த எம்.எம்.சுந்தரேஷ் உட்பட 9 பேர் உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். உச்ச நீதிமன்றத்தில் 24 நீதிபதிகள் இருந்து வந்த நிலையில் கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று மேலும் 9 பேர் நியமிக்கப்பட்டனர். அந்த 9 பேருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதி அபய் ஸ்ரீநிவாஸ் ஓகா, நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி ஜெ.கே.மகேஸ்வரி, நீதிபதி ஹிமா கோலி, நீதிபதி பி.வி.நாகரத்னா, நீதிபதி சி.டி.ரவிக்குமார், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதி பீலா எம்.திரிவேதி மற்றும் அரசின் கூடுதல் வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.

இவர்களில் நீதிபதி பி.வி.நாகரத்னா பணி மூப்பு அடிப்படையில் வரும் 2027ஆம் ஆண்டு முதல் பெண் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ளது. தற்போது 9 பேர் பதவியேற்றுள்ள நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தலைமை நீதிபதியையும் சேர்த்து 33 ஆக உயர்ந்துள்ளது. இந்த 9 புதிய நீதிபதிகளின் பின்புலம் இங்கே...

நீதிபதி எம்.எம் சுந்தரேஷ்: கடந்த 1962-ஆம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்த இவர், லயோலா கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற பின், மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 1985-ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றிய வரும் இவர், தமிழக அரசு வழக்கறிஞராக பணியாற்றியவர். 2009-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2011-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாக பணியாற்றி வந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது மூத்த நீதிபதியாக இருந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.

image

நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா: 1960-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி பிறந்த இவர் பம்பாய் பல்கலைக்கழகத்தில் தனது சட்டப் படிப்பை நிறைவு செய்தார். 1983-ஆம் ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கிய இவர், ஆரம்ப காலத்தில் நிறைய பொதுநல வழக்குகளை தொடர்ந்தவர். கடந்த 2003-ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்ற இவர், 2005-ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக பதவி வகித்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

நீதிபதி விக்ரம் நாத்: 24.9.1962-ல் பிறந்த இவர் 1986-ஆம் ஆண்டு தனது சட்டப் படிப்பை முடித்தார். அதற்கு முன்பாக 1983-ஆம் ஆண்டு அறிவியல் துறையில் பட்டம் பெற்றார். 1987-ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கிய இவர், கடந்த 2006-ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் குஜராத் உயர் நீதிமன்றத்தின
தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த இவர், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.

நீதிபதி ஜெ.கே.மகேஸ்வரி: 1961-ஆம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி பிறந்த இவர், 1985-ஆம் ஆண்டு வழக்கறிஞர் படிப்பை முடித்து, அதே ஆண்டு மத்தியப் பிரதேசம் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற தொடங்கினார். 2005-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பணியாற்றத் தொடங்கியவர், 2008-ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2021-ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி சிக்கிம் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

image

நீதிபதி ஹிமா கோலி: 1959-ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி டெல்லியில் பிறந்த இவர், தனது சட்டப் படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார். 1984-ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற தொடங்கிய இவர், டெல்லி அரசு வழக்கறிஞராக பல முக்கியமான வழக்குகளுக்கு ஆஜராகியுள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்ற இவர், அடுத்த ஆண்டு நிரந்தர நீதிபதியாக பொறுப்பு வகித்தார். இவர் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

நீதிபதி பி.வி.நாகரத்னா: கடந்த 1962-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி பிறந்த இவர் 1987-ஆம் ஆண்டு பெங்களூரு கீழமை நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார். சேவை சட்டங்கள், பொது சட்டம், வர்த்தக சட்டம் போன்றவற்றில் நிபுணரான இவர், பிறகு கடந்த 2008-ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு, 2010-ஆம் ஆண்டு முதல் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பதவியேற்க வாய்ப்பு உள்ளது.

image

நீதிபதி சி.டி.ரவிக்குமார்: கடந்த 1960-ஆம் ஆண்டு பிறந்த இவர் கோழிக்கோடு அரசு சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் படிப்பை முடித்தார். 1986-ஆம் ஆண்டு முதல் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கிய இவர், கேரள அரசின் வழக்கறிஞராக பணி புரிந்தார். 2009-ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் கேரளா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

நீதிபதி பீலா எம்.திரிவேதி: 1960-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்த இவர், கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றி தொடங்கினார். குஜராத் உயர்நீதிமன்றத்தில் சிவில் கிரிமினல் வழக்குகளில் ஆஜராக தொடங்கிய இவர், பிறகு அகமதாபாத் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்ற தொடங்கினார். 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத் உயர் நீதிமன்றத்திலும், அதே ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திலும் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

நீதிபதி நரசிம்மா: 1963-ஆம் ஆண்டு பிறந்த இவர், நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களிலும் மிகப் பிரபலமான வழக்கறிஞராக செயல்பட்டு வந்தவர். கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அயோத்தியா வழக்கு, இத்தாலிய கடற்படை வீரர்கள் கொலை வழக்கு, பிசிசிஐ வழக்கு என மிகப் பிரபலமான வழக்குகளில் ஆஜராகி அறியப்பட்டவர். வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறும் 9-வது நபர் ஆவார். இவர் வரும் 2027ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்க வாய்ப்புள்ளது.

- நிரஞ்சன் குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்