Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பொருளாதாரம் தடுமாறினாலும் புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்: காரணங்கள் என்னென்ன?

கோவிட் பாதிப்பிலிருந்து மீள இந்தியப் பொருளாதாரம் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியப் பங்குச்சந்தைகள் மீண்டுமொரு உச்சத்தை தொட்டுள்ளன. விறுவிறுப்பான வணிகத்தில் நிஃப்டி 17,000 புள்ளிகளையும், சென்செக்ஸ் 57,000 புள்ளிகளையும் செவ்வாய்க்கிமை எளிதாகக் கடந்தது, முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளன. இதில் நிஃப்டி ஒரேநாளில் 201 புள்ளிகளும், சென்செக்ஸ் 562 புள்ளிகளும் உயர்ந்துள்ளது, சந்தை எத்தகைய கிடுகிடு உயர்வை கண்டு வருகிறது என்பதற்கு சான்றாக உள்ளது.

அமெரிக்காவில் பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்படும் என்ற அச்சம் இருந்து வந்த நிலையில், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் அத்தகைய நடவடிக்கை எதையும் தற்போது எடுக்கப்பவதில்லை என தெரிவித்துள்ளதால், தொடர்ந்து அந்நிய முதலீடுகள் இந்திய பங்குச்சந்தையில் வந்த வண்ணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், சீன நாட்டிலே முதலீட்டாளர்களுக்கு சமீப காலங்களில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருவதால், அவர்களுடைய கவனம் இந்தியா பக்கம் முழுமையாக திரும்பும் எனவும் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

image

இதனால்தான் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து பல்வேறு கேள்விக்குறிகள் தொடர்ந்தாலும், நிஃப்டி 17,132 புள்ளிகள் மற்றும் சென்செக்ஸ் 57,522 புள்ளிகள் என்றுமாக மேலும் ஒரு புதிய உச்சத்தில் வர்த்தகம் நேற்று (செவ்வாய்க்கிழமை) முடிவடைந்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தைகளும் நேற்றைய தினம் விறுவிறு உயர்வை கண்டது குறிப்பிடத்தக்கது.

ஐடி நிறுவனங்களின் பங்குகள், ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் மற்றும் பல்வேறு வங்கிகளின் பங்குகள் கடந்த சில நாட்களாக தொடர் உயர்வை சந்தித்து வருகின்றன. ஏற்கெனவே அச்சப்பட்டது போல கோவிட் மூன்றாவது அலை இதுவரை இந்தியாவை தாக்கவில்லை என்பதும், அதேசமயத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகம் பெற்றுள்ளது என்பதும் சந்தையின் உற்சாகத்துக்கு காரணமாக உள்ளதாக கருதப்படுகிறது.

ஒருவேளை மூன்றாவது அலை தாக்கினாலும், தடுப்பூசி பாதுகாப்பு காரணமாக பாதிப்பு அதிகம் இருக்காது என கார்ப்பரேட் நிறுவனங்கள் கணித்துள்ளனர். ஏற்கெனவே தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் முன்புபோல செயல்பட தொடங்கியிருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டால் இயல்பு நிலை விரைவில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகமாகவே இருப்பது, பல்வேறு உலோகங்களின் விலை தட்டுப்பாடு காரணமாக அதிகரித்துள்ளது போன்ற கவலைகளும் தொடர்கின்றன. இதனால்தான் இந்திய ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து பணப்புழக்கத்தை குறைக்காமல், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முயற்சி செய்யும் என்றும், இதனால் வட்டி விகிதங்கள் உயராமல் இருக்கும் என்றும் நிறுவனங்கள் கருதுகின்றன.

கோவிட் பாதிப்பு காரணமாக அமெரிக்க அரசு மக்களுக்கும், நிறுவனங்களுக்கு நேரடியாக நிதி உதவி அளித்த நிலையில், அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் தொடர்ந்து "அசட் பர்சேஸ்" என்று அழைக்கப்படும் முறையில் பத்திரங்களை விலைக்கு வாங்கி, அதன்மூலம் பணப்புழக்கத்தை தாராளமான அளவில் வைத்திருந்தது. ஒருவேளை இந்தப் பணப்புழக்கம் சுருக்கப்படுமோ என முதலீட்டாளர்கள் அச்சத்துடன் இருந்தார்கள். இப்போதைக்கு அப்படி நடக்கப்போவதில்லை என்பது தெளிவாகி உள்ளதால், இந்திய பங்குச்சந்தைகள் புதிய உற்சாகத்துடன் தொடர் உயற்சியிப்பாதையில் இறக்கை விரித்துதுள்ளன.

- கணபதி சுப்பிரமணியம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்