பண்டிகைகள் காரணமாக மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைககள் அடுத்த சில மாதங்களில் வர உள்ள நிலையில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எனவே அதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக பண்டிகைக் காலங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வேண்டும் என மத்திய உள்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்று பரவல் தேசிய அளவில் கட்டுக்குள் இருந்தாலும் சில மாநிலங்களில் மட்டும் கட்டுக்குள் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தீவிரமாக அமலாக்க வேண்டும் என்றும் இதைச் செய்யத் தவறும் அதிகாரிகளை அத்தவறுக்கு பொறுப்பாக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்