Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'விக்ரஹா' ரோந்துக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரோந்துப்படை கப்பலான 'விக்ரஹா'வை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
 
இந்திய கடலோர காவல்படைக்காக 'விக்ரஹா' என்ற ரோந்துக் கப்பலை, L & T நிறுவனம் வடிவமைத்து தயாரித்துள்ளது. இந்திய கடலோர காவல் படையின் ரோந்துக் கப்பல்கள் வரிசையில் ஏழாம் இடத்தில் இந்தக் கப்பல் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே உள்ள விக்ரம், விஜய், வீர், வரகா, வரத், வஜ்ரா ஆகிய போர்க்கப்பல்களுடன் தற்போது விக்ரஹா இணைக்கப்பட்டுள்ளது. கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்தியத்தில் 'விக்ரஹா' ரோந்துக் கப்பல் பணியாற்ற உள்ளது.
 
image
98 மீட்டர் நீளம் கொண்ட 'விக்ரஹா' ரோந்துக்கப்பலில், இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர், 4 அதிவேக படகுகளை கொண்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு, சட்ட அமலாக்கம் மற்றும் கடல் ரோந்து பணிகளில் தீவிரமாக செயல்பட உள்ளது. 11 கடற்படை அதிகாரிகள் மற்றும் 110 மாலுமிகள் பணியாற்றும் வகையில் இந்தக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வகையான அடிமைத்தனத்திற்கும் ஆட்படாதது என பொருள்படும் வகையில் விக்ரஹா என்ற பெயர் இந்தக் கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.
 
இந்த ரோந்துக் கப்பலை, சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். விழாவில் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே, இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குநர் கே.நடராஜன், தமிழ்நாடு அரசின் சார்பில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்திய கடலோரப் பகுதிகளை விக்ரஹா இன்னும் சிறப்பாக பாதுகாக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
 
image
சென்னை விழாவைத் தொடர்ந்து, ராஜ்நாத் சிங் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு புறப்பட்டார். அங்கு பயிற்சியில் பங்கேற்றுள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 50 நாடுகளின் ராணுவ முதன்மை அதிகாரிகள், இந்தியாவின் 700 ராணுவ அதிகாரிகள் ஆகியோருடன், ராஜ்நாத் சிங் நாளை கலந்துரையாடுகிறார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்