ஒன்று முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்கக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்று முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி நேரடி வகுப்புகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
எனவே, நோய்த் தொற்று ஏற்படாத வகையில், வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, சமையலறை, தளவாட பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும் தேவையான அளவு முகக்கவசம் இருப்பதையும், போதுமான அளவு கிருமி நாசினி இருப்பதையும் உறுதி செய்திட வேண்டும். வகுப்பறையில் தனிமனித இடைவெளியுடன் மாணவர்கள் அமரும் வகையில் இடவசதி இருப்பதை உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடவேளையின் இடைவேளை மற்றும் மதிய உணவு இடைவேளையின் போது ஆசிரியர்கள் முழு கவனத்துடன் மாணவர்களை கண்காணிக்க வேண்டும். நடமாடும் மருத்துவக்குழு, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியரின் தொலைபேசி எண்கள் பள்ளியின் அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டு இருப்பதை உறுதி செய்திட வேண்டும். அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்திட வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கு பெற இருப்பதால், அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தும் நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிலையான வழிகாட்டு செயல்முறைகளை ஆசிரியர்கள், மாணவர்கள் கடைப்பிடித்திட மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்