”சசிகலாவுக்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது” என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
.
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அதிமுக கழகப் பொதுச்செயலாளர் என்ற அடையாளத்துடன் தொண்டர்களுக்கு நேற்று ”கழகம் நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது தொடர்வோம் வெற்றிப்பயணத்தை. ஒன்றுபடுவோம்... வென்றுகாட்டுவோம்” என்று கடிதம் எழுதியிருந்தார். அதற்கு முன்னதாகவும், அதிமுகவின் பொன்விழா ஆண்டையொட்டி, தனது இல்லத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் படத்திற்கு, சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தியிருந்தார். பின்னர், அதிமுக கொடிகட்டிய காரில் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்குச் சென்ற அவர், அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்தார். பொன்விழா ஆண்டு கொடியேற்றும் நிகழ்வையொட்டி கல்வெட்டையும் திறந்து வைத்தார். அதில், அதிமுகவின் பொதுச்செயலாளார் வி.கே.சசிகலா என பொறிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக ஆளுநருடன் சந்திப்பு முடிவடைந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “சசிகலா அதிமுக கட்சியில் இல்லை. அவரைப் பற்றி நாங்கள் கவலை கொள்ளவில்லை” என்று தெரிவித்தவர் ’அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா என கல்வெட்டு நிறுவப்பட்டுள்ளதே?’ என்ற கேள்விக்கும் பதிலளித்துள்ளார். ”நீதிமன்றம் தேர்தல் ஆணையம் என அனைத்துமே நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று ஏற்கெனவே தெளிவுப்பட தெரிவித்துவிட்டனர். அதனால், சசிகலா பேசுவதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. அவர் எங்கள் கட்சியிலேயே இல்லை. ஊடகங்களே அவர் பேசுவதை பரப்பரப்பிற்காக பெரிதுப்படுத்துகின்றனர். பொய்யான கல்வெட்டு வைத்ததாக சட்டப்பூர்வ நடவடிக்கையை அதிமுக சசிகலா மீது எடுக்கும்” என்று கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்