Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்கவிடாமல் தடுத்து நிறுத்துகிறார்கள்” - பிரியங்கா காந்தி

பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்கவிடாமல் வழியிலேயே காவல் துறையினர் தடுக்க முயற்சித்ததாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி புகார் தெரிவித்துள்ளார்.
 
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள், அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு கருப்புக்கொடி காட்ட லக்கிம்பூர் கேரி அருகேயுள்ள திக்கோனியா என்ற இடத்தில் குவிந்தனர். அப்போது துணை முதலமைச்சரை வரவேற்க சென்ற பாஜகவினரின் கார்கள் திடீரென கூட்டத்திற்குள் புகுந்ததில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள், கார்களுக்கு தீ வைத்தனர்.
மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரில் இருந்ததாகவும் அவரது தூண்டுதல் காரணமாகவே விவசாயிகள் மீது கார்கள் மோதியதாகவும் சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இறந்த 4 விவசாயிகளில் ஒருவர், ஆஷிஷ் துப்பாக்கியால் சுட்டதால் இறந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
 
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா, விவசாயிகள் கற்களை கொண்டு தாக்கியதால் கார்கள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகவும் அதன் அடியில் சிக்கியதாலேயே உயிரிழப்புகள் நேரிட்டதாகவும் விளக்கமளித்துள்ளார். சம்பவ இடத்தில் தானோ, தனது மகனோ இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாக கூறிய அவர், விவசாயிகள் கூட்டத்தில் இருந்த சிலரின் தாக்குதலில் பாஜகவினர் 3 பேரும் ஓட்டுநர் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார். தனது மகன் சம்பவ இடத்தில் இருந்திருந்தால் அவர் உயிரோடு திரும்பியிருக்க முடியுமா எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 
image
8 பேர் இறந்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். வன்முறை நிகழ்ந்த லக்கிம்பூர் கேரி பகுதியில் உத்தரப்பிரதேச சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தலைமையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது.
 
இதனிடையே, கார்கள் மோதியதில் விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் வன்முறைக்கு காரணமாக இருந்ததற்காக மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அஜய் மிஸ்ரா நீக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.
 
பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, நள்ளிரவே லக்கிம்பூர் கேரி நோக்கி காரில் புறப்பட்டுச்சென்றார். வழியில் காவல்துறையினர் தடுக்க முயற்சித்ததாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். இந்த நாடு விவசாயிகளுக்கு சொந்தமானது என்றும் ஆளுங்கட்சிக்கு சொந்தமானது அல்ல எனவும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளை இன்று சந்திக்க உள்ளதாக அறிவித்திருக்கிறார். முன்னதாக லக்கிம்பூர் செல்ல திட்டமிட்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்