இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் ‘இந்தியா, இலங்கை மீனவர்கள் இடையேயான நீண்ட கால பிரச்னையில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். 23 மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க இலங்கை அதிகாரிகளிடம் இந்திய வெளியுறவுத் துறை வலியுறுத்த வேண்டும். இலங்கை கடற்படையால் அப்பாவி மீனவர்கள் தாக்கப்படுவது ஆழ்ந்த கவலை ஏற்படுத்துகிறது’ எனக்குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து, 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்களின் மூன்று படகுகளையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தி வைத்தனர். பின் கைது செய்யப்பட்டிருந்த மீனவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தொடர்புடைய செய்தி: 23 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
வருகிற 28ஆம் தேதி வரை காரை நகர் கடற்படை முகாமில், மீனவர்களை தனிமைபடுத்தி காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட படகுகள், மயிலட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்தான் தற்போது மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்